நியூயார்க் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இன்று அமெரிக்காவை எதிர்கொள்கிறது. கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் அமெரிக்காவும் மோதும் முதல் போட்டி இதுவாகும். இந்த போட்டி நியூயார்க் நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
நியூயார்க் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால் எந்த பேட்ஸ்மேன்களும் ரன்கள் சேர்க்க தடுமாறி வருகின்றனர். இதனால் யார் வெற்றி பெறுவார்? யார் தோல்வி தழுவார் என்று கணிக்க முடியாத அளவுக்கு இருக்கின்றது.

இந்த சூழலில் தான் அமெரிக்காவை இந்தியா எதிர்கொள்கிறது. பாகிஸ்தானை வீழ்த்திய உத்வேகத்துடன் அமெரிக்க அணி இருக்கின்றது. இந்த சூழலில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தினாலும், பேட்டிங்கில் சில பிரச்சனைகள் இருக்கின்றது. அதனை இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா சரி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கி கடந்த இரண்டு இன்னிங்ஸிலும் சொதப்பினார். விராட் கோலியால் பவர் பிளேவில் அதிரடி காட்ட முடியவில்லை. இதனால் அவரை நம்பர் மூன்றாவது வீரராகவே களம் இறக்க ரோஹித் சர்மா முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
விராட் கோலிக்கு பதிலாக ஜெய்ஷ்வாலை தொடக்க வீரராக சேர்க்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதேபோன்று சிவம் துபே பேட்டிங் மற்றும் பில்டிங்கில் தடுமாறி வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிவம் துபேவுக்கு பந்து வீசவே வாய்ப்பு தரப்படவில்லை. இதனால் சிவம் துபேவை நீக்கிவிட்டு அந்த இடத்தில் சஞ்சு சாம்சனை சேர்க்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இல்லை சிவம் துபே அணியில் கண்டிப்பாக தேவை என ரோகித் சர்மா நினைத்தால் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை தொடக்க வீரராக பயன்படுத்தவும் வாய்ப்பு இருக்கின்றது. இதேபோன்று கிரிக்கெட் வல்லுநர்கள் சிலர் ஜடேஜாவை நீக்கிவிட்டு குல்தீப் யாதவை அந்த இடத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு தடுமாறுவதாகவும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். அப்படி ஒரு முடிவை ரோகித் எடுத்தால் நிச்சயம் சிவம் துபே பேட்டிங்கிற்காக அணியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியா எந்த மாதிரி அணியை தேர்வு செய்யப் போகிறது என்பதை எதிர்பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.