இந்தியா - வெ.இண்டீஸ் போட்டி
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உலகக்கோப்பை தொடருக்கு பின் மோதும் முதல் சர்வதேச போட்டி இந்த டி20 தான், அதனால், இரண்டு அணிகளும் வெற்றியுடன் போட்டியை துவக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தனர்.
இந்திய அணி விவரம்
இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அப்போது கேப்டன் கோலி இந்திய அணி வீரர்கள் குறித்த விவரத்தை அறிவித்தார். தவான், ரோஹித், கோலி, ரிஷப் பண்ட், மனிஷ் பாண்டே, க்ருனால் பண்டியா, ஜடேஜா, புவனேஸ்வர் குமார், வாஷிங்க்டன் சுந்தர், கலீல் அஹ்மது மற்றும் சைனி இடம் பெற்று இருந்தனர்.
மூன்று வீரர்களுக்கு இடம் இல்லை
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம் பெறவில்லை. அதே போல, ஐபிஎல் தொடரில் கலக்கிய சுழற் பந்துவீச்சாளர் ராகுல் சாஹர், ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை இரண்டிலும் சிறப்பாக ரன் குவித்த ராகுல் என இருவரின் பெயரும் அணிப் பட்டியலில் இல்லை.
ரசிகர்கள் கொந்தளிப்பு
இதைக் கண்ட ரசிகர்கள் இது என்ன அணி? முக்கிய வீரர்கள் இல்லையே? என பொங்கி எழுந்தனர். குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாதது குறித்து தான் பலரும் கேள்வி எழுப்பினர். இந்திய அணியின் மிடில் ஆர்டர் மோசமாக இருக்கும் நிலையில், ஸ்ரேயாஸ் போன்ற பொறுப்பான வீரரை ஏன் அணியில் தேர்வு செய்யவில்லை என கேட்டனர்.
மூன்று ஸ்பின்னர்கள்
அதே போல, அணியில் ஏன் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது எனவும் கேள்வி எழுப்பினர். வாஷிங்க்டன் சுந்தர், ஜடேஜா, க்ருனால் பண்டியா என மூன்று வீரர்கள் எதற்கு? அதற்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது ராகுலை தேர்வு செய்து இருக்கலாமே என கேட்டனர்.
எப்படி இடம் கொடுப்பது?
ரசிகர்கள் இப்படி கேள்வி கேட்டாலும், எத்தனை பேருக்கு தான் அணியில் இடம் கொடுக்க முடியும்? என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை என்பது தான் நிதர்சனம். மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் எடுத்தது தவறு என்று கூறினாலும் போட்டியில் அவர்கள் தான் ஆதிக்கம் செலுத்தினர். முதல் ஓவர் முதல் சுழற் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுத்து அசத்தினர்.