வெ.இண்டீஸ் பேட்டிங்
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் கீரான் பொல்லார்டு மட்டுமே நிதானமாக ஆடி தன் அனுபவத்தை காட்டினார். மற்ற வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்து சென்றனர். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மொத்தமாக ஆதிக்கம் செலுத்தினர்.
நவ்தீப் சைனி அசத்தல்
அதிலும் அதிவேகமாக பந்து வீசிய நவ்தீப் சைனி 4 ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். அதிலும் போட்டியின் கடைசி ஓவரை விக்கெட் மெய்டன் ஓவராக வீசி ஆச்சரியம் அளித்தார். அந்த ஓவரில் தான் தன் விக்கெட்டை இழந்தார் பொல்லார்டு.
போராடிய பொல்லார்டு
பொல்லார்டு நிதானமாக பேட்டிங் செய்து 49 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார். கடைசி ஓவரில் பவுண்டரி அடிக்க முயன்ற அவர் முதல் இரண்டு பந்துகளில் திணறினார். மூன்றாவது பந்தை ஃபுல் டாஸாக வீசினார் சைனி. அது அவரின் காலில் பட்டது.
ரிஷப் பண்ட் டிஆர்எஸ்
சைனி உட்பட இந்திய வீரர்கள் சந்தேகத்தோடு எல்பிடபுள்யூ கேட்டனர். அம்பயர் மறுத்து விட்டார். ஆனால், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அவுட் தான் என தீர்மானமாக கூறி, கேப்டன் கோலியை டிஆர்எஸ் கேட்குமாறு கூறினார்.
கோலி பாராட்டு
ரிவ்யூவில் அவுட் தான் எனத் தெரிந்தது. தோனி தான் ரிவ்யூ கேட்பதில் கில்லாடி என இத்தனை நாள் கூறப்பட்டு வந்த நிலையில், ரிஷப் பண்ட் அவர் வழியை பின்பற்றி அசத்தினார். கேப்டன் கோலி, களத்திலேயே பண்ட்டை கை தட்டி பாராட்டினார்.
பேட்டிங்கில் சொதப்பல்
கீப்பிங்கில் அசத்திய பண்ட் பேட்டிங்கில் சொதப்பினார். தான் சந்தித்த முதல் பந்திலேயே தேவையற்ற ஷாட் ஆட முயன்று கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி ரோஹித் சர்மா ஆட்டமிழந்த அடுத்த பந்திலேயே, பண்ட்டையும் இழந்து தடுமாறியது.