இளம் வீரர்கள்
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 2020 டி20 தொடரை மனதில் வைத்து இளம் வீரர்களை அணியில் தேர்வு செய்தது இந்திய அணி நிர்வாகம். அந்த இளம் வீரர்களில் வாஷிங்க்டன் சுந்தரும் ஒருவர். ஆல்-ரவுண்டர் என கூறப்பட்டாலும், சுழற் பந்துவீச்சாளராகவே அறியப்படுகிறார் சுந்தர்.
பரிதாப நிலையில் சுந்தர்
அணியில் இடம் கிடைத்தாலும் போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்காது என்ற அளவில் தான் அவரது நிலைமை உள்ளது. அதற்கு காரணம், டி20 அணியில் நான்காவது சுழற் பந்துவீச்சாளராகவே சேர்க்கப்பட்டுள்ளார் சுந்தர். அவருக்கு முன் க்ருனால் பண்டியா, ரவீந்திர ஜடேஜா, இளம் வீரர் ராகுல் சாஹர் என மூன்று வீரர்கள் இருக்கின்றனர்.
நிதாஸ் ட்ராபியில் அசத்தல்
18 வயதில் நிதாஸ் ட்ராபியில் தன் அசத்தல் பந்துவீச்சால் 5 போட்டிகளில் 8 விக்கெட்கள் வீழ்த்தி தொடர் நாயகன் விருது வென்றார் வாஷிங்க்டன் சுந்தர். ஆனால், அதன் பின் அவருக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. நீண்ட போராட்டத்துகுப் பின் தற்போது டி20 அணியில் இடம் பிடித்துள்ளார். இப்போது அவருக்கு 19 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
யாருக்கு வாய்ப்பு?
வெஸ்ட் இண்டீஸ் தொடரை பொறுத்தவரை இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் அணியில் ஆட வாய்ப்புள்ளது. க்ருனால் பண்டியா கடந்த டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு அணியில் நிச்சயம் இடம் உண்டு.
இடம் கடினம்
மற்ற வீரர்களில் ஜடேஜா அனுபவம் வாய்ந்த, ஆல்-ரவுண்டர் என்பதால் அவருக்கு வாய்ப்பு அதிகம். இவர்கள் இருவரில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் ராகுல் சாஹர், சுந்தர் இடையே அந்த ஒரு இடத்தை பிடிக்க போட்டி ஏற்படும்.
ஒரு போட்டியில் வாய்ப்பு
இந்த டி20 தொடரில் மூன்று போட்டிகள் இருப்பதால் முதல் இரண்டு போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றினால், மூன்றாவது போட்டியில் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், அதுவும் சந்தேகம் தான்.