துவக்கம் சொதப்பல்
தவான் போட்டியின் மூன்றாம் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து நிதானமாக ஆடி வந்த ரோஹித் சர்மா எப்படியும் வேகம் எடுப்பார் என காத்திருந்த போது 34 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
பண்ட் அவுட்
அடுத்து வந்த இளம் வீரர் ரிஷப் பண்ட் நிதானமாக ஆட முயன்றாலும் 35 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது கோலி மட்டுமே அணியின் நம்பிக்கையாக விளங்கினார்.
கோலி - ஸ்ரேயாஸ் கூட்டணி
ஐந்தாவது பேட்ஸ்மேனாக களமிறங்கினார் ஸ்ரேயாஸ் ஐயர். அவர் கோலியுடன் இணைந்து பொறுப்பாகவும், விரைவாகவும் ரன்கள் குவித்தார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்தது.
கோலி சதம்
விராட் கோலி ஐந்து மாதம் கழித்து சர்வதேச அரங்கில் சதம் அடித்து அசத்தினார். இது அவரது 42வது ஒருநாள் போட்டி சதம் ஆகும். 125 பந்துகளில் 120 ரன்கள் எடுத்த கோலி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஸ்ரேயாஸ் அரைசதம்
ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக ஆடி 68 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். 4 ஃபோர், 1 சிக்ஸ் மட்டுமே அடித்த ஸ்ரேயாஸ் ஐயர் அதிக ஒற்றை ரன்கள் அடித்தும் ஸ்ட்ரைக் ரேட்டை நூறுக்கும் மேல் வைத்திருந்தார். இந்த இன்னிங்க்ஸ் மூலம் அணியில் தன் இடத்தை கிட்டத்தட்ட அடுத்த தொடர் வரை உறுதி செய்தார்.
கடைசியில் தடுமாற்றம்
ஸ்ரேயாஸ், கோலி சென்ற உடன் இந்திய அணியில் தடுமாற்றம் துவங்கியது. 42வது ஓவரில் ஜடேஜா - ஜாதவ் ஜோடி சேர்ந்தனர். ஜாதவ் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புவனேஸ்வர் 1 ரன் மட்டுமே எடுத்தார். ஜடேஜா, ஷமியை எதிரில் வைத்துக் கொண்டு ரன்னும் ஓட முடியாமல், பவுண்டரியும் அடிக்க முடியாமல் திணறினார்.
சுழற்பந்துவீச்சுக்கு சாதகம்
இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழந்து 279 ரன்கள் எடுத்து இருந்தது. ஜடேஜா 16*, ஷமி 3* ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர். ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால் இந்த ஸ்கோர் போதுமானது என கூறப்படுகிறது. எனினும், இந்திய அணி 300 ரன்களை தொட்டிருக்க வாய்ப்பு இருந்தது. ஜாதவ், ஜடேஜா பவுண்டரி அடிக்க திணறியதால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை.