டாஸ் முடிவு
முன்னதாக இந்தப் போட்டி நடைபெறும் மைதானம் முதல் போட்டியைப் போன்றே மழை காரணமாக ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து ஆச்சரியம் அளித்தார். ஆனால், போட்டியின் இறுதியில் அவரது டாஸ் முடிவு சரிதான் என நிரூபித்தார்.
இந்திய அணி மாற்றம்?
முதல் போட்டியில் ஆடிய இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த வெற்றிக் கூட்டணி அப்படியே இரண்டாம் போட்டியிலும் களமிறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் துவக்க வீரர் ஜான் காம்பெல் நீக்கப்பட்டு பந்துவீச்சாளர் காரி பியர்ரே சேர்க்கப்பட்டார்.
இந்தியா பேட்டிங்
பேட்டிங்கில் இந்திய அணியின் ரோஹித் சர்மா - தவான் அதிரடியாக ரன் குவித்தனர். தவான் 23 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், ரோஹித் 3 சிக்ஸ் உட்பட அதிரடி ஆட்டம் ஆடி, அரைசதம் கடந்து 67 ரன்கள் குவித்தார்.
ஜடேஜா, க்ருனால் அதிரடி
அவர் சென்ற பின் கோலி 28, ரிஷப் பண்ட் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் ரன் ரேட் 8க்கும் குறைவாக சரிந்தது. கடைசி ஓவரில் க்ருனால் 2 சிக்ஸ், ஜடேஜா 1 சிக்ஸ் அடிக்க அந்த ஓவரில் மட்டும் 20 ரன்கள் எடுத்தது இந்திய அணி.
அணியை காப்பாற்றினர்
அவர்களது கடைசி ஓவர் அதிரடி இல்லாமல் போயிருந்தால், பின்னர் டிஎல்எஸ் விதிப்படி வெற்றி நிர்ணயிக்கப்பட்ட போது சிக்கல் ஏற்பட்டு இருக்கும். 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழந்து 167 ரன்கள் எடுத்தது இந்தியா.
வெ.இண்டீஸ் சேஸிங்
வெ.இண்டீஸ் அணிக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணிக்கு இது கடினமான இலக்காகவே கருதப்பட்டது. சுனில் நரைன், ஈவின் லீவிஸ் துவக்கம் அளித்தனர். லீவிஸ் டக் அவுட் ஆனார். நரைன் 4 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அடுத்து பாவெல் அதிரடி ஆட்டம் ஆடினார். நிக்கோலஸ் பூரன் அவருக்கு ஒத்துழைப்பு தந்து ஆடினார்.
போட்டியில் தடை
பாவெல் 54, பூரன் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பொல்லார்டு - ஹெட்மயர் பேட்டிங் செய்து வந்தனர். அப்போது மின்னல் காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி 15.3 ஓவர்களில் 98 ரன்கள் எடுத்து இருந்தது. 27 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்தது. அதன் பின் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், போட்டி கைவிடப்பட்டது.
இந்தியா வெற்றி
டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சிறப்பாக பேட்டிங் செய்த ரோஹித், கடைசி ஓவரில் 3 சிக்ஸ் அடித்த ஜடேஜா - க்ருனால் ஜோடி, பந்துவீச்சில் 2 விக்கெட்கள் வீழ்த்திய க்ருனால் பண்டியா ஆகியோர் தான் வெற்றிக்கு காரணம்.