
நிலையில்லாத பார்ம்
ஐபிஎல் தொடரில் ஓரளவு சிறப்பாக ஆடிய ரஹானே, தனக்கு உலகக்கோப்பை ஒருநாள் அணியில் இடம் இல்லை என்று தெரிந்த உடன் இங்கிலாந்து கவுன்டி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றார். அதில் ஏழு போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரைசதம் அடித்தாலும், அதிக முறை ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து நிலையில்லாத பார்ம் கொண்டு இருந்தார்.

இடம் சந்தேகம்
அதனால், அவர் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறுவாரா என்ற சந்தேகம் இருந்தது. ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் நல்ல பார்மில் இருக்கும் நிலையில், அவரை டெஸ்ட் போட்டிகளில் ஆட வைக்க வேண்டிய அழுத்தம் இருந்தது. ஆனால், முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா இடம் பெறவில்லை. ரஹானே வாய்ப்பு பெற்றார்.

இந்தியா தவிப்பு
முதல் டெஸ்ட் போட்டி துவங்கும் முன் மழை பெய்ததால் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. அதை பயன்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. 25 ரன்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தி, டெஸ்ட் மன்னன்களான புஜாரா, கோலியை வெளியே அனுப்பியது.

அரைசதம் அடித்த ரஹானே
அதனால், இந்தியா தவித்து வந்த போது ஐந்தாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய துணை கேப்டன் ரஹானே பொறுமையாக ஆடி அரைசதம் கடந்தார். 81 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ராகுல் 44, விஹாரி 32 ரன்கள் எடுத்து அவருக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

காப்பாற்றிய ரஹானே
ரஹானேவின் அரைசதத்தால் இந்திய அணி 200 ரன்களை கடந்து ஆடி வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்து இருந்தது. கோலி, புஜாரா, மாயங்க் சொதப்பிய போதும் ரஹானே அணியை காப்பாற்றினார்.

வாயை அடைத்தார்
இந்த டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளில் ரஹானே சரியாக ஆடவில்லை என்றால் அணியில் இடத்தை இழக்க நேரிடும் என்றும், அவரை அணியில் சேர்த்ததே தவறு என்றும் கூறி வந்த பல விமர்சகர்கள், ரசிகர்கள் வாயை ஒரே அரைசதம் மூலம் அடைத்துள்ளார் ரஹானே.


Click it and Unblock the Notifications