இடம் கடினம்
டெஸ்ட் போட்டிகளில் ராகுல் ஏற்கனவே மோசமான பார்மில் இருப்பதால் அவருக்கு இடம் கிடக்கிறது என்ற நிலை தான் இருந்தது. எனினும். ப்ரித்வி ஷா தடையால், டெஸ்ட் தொடரில் வாய்ப்பு பெற்றார். உலகக்கோப்பை தொடரிலும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடி இருந்தார்.
சிறப்பாக ஆட வேண்டும்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடினால் மட்டுமே அவருக்கு தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருந்தது.
முதல் டெஸ்ட் போட்டி
முதல் டெஸ்டில் முதல் இன்னிங்க்ஸில் 44 ரன்களும், இரண்டாம் இன்னிங்க்ஸில் 38 ரன்களும் எடுத்தார் ராகுல். அது ஓரளவு சராசரி ரன் தான் என்றாலும், மோசமான ஷாட் ஆடி ஆட்டமிழந்ததால் இரண்டாம் போட்டியில் சரியாக ஆட வேண்டிய நிலையில் இருந்தார்.
விமர்சனம் எழுந்தது
இரண்டாம் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அப்போதே அவர் மீது விமர்சனம் அதிகரித்தது. பலரும் ராகுலை நீக்கி விட்டு ரோஹித் சர்மாவை துவக்க வீரராக களமிறக்க வேண்டும் என கூறினர்.
டொக்கு வைத்தார்
இந்த நிலையில் இரண்டாம் இன்னிங்க்ஸில் பேட்டிங் ஆட வந்த அவர் மிகவும் நிதானமாக ஆட முடிவு செய்தார். அவருடன் வந்த மற்றொரு துவக்க வீரர் மயாங்க் அகர்வால் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் இன்னும் ரன்னே அடிக்காமல் "டொக்கு" வைத்து ஆடினார்.
63 பந்துகள் சந்தித்தார்
சுமார் 63 பந்துகளை சந்தித்த அவர் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து கீமர் ரோச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் எடுத்த 6 ரன்களில் ஒரு ஃபோரும் அடங்கும்.
டாட் பால்கள்
அப்படிப் பார்த்தால், கிட்டத்தட்ட 60 பந்துகளில் அவர் ரன் எடுக்காமல் டாட் பால்களாக ஆடி இருக்கிறார். நிதானமாக ஆட வேண்டும் என்பதை நினைத்து ரன் அடிப்பதை மறந்து விட்டாரா? என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது அவர் ஆட்டம்.
ராகுல் தடுமாறினார்
வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சமாளிக்க ராகுல் தடுமாறினார். அது தான் ரன் எடுக்காமல் போக முக்கிய காரணம். அணியில் தன் இடத்தை தக்க வைக்க வேண்டும் என்று, ரன்னும் எடுக்காமல், 63 பந்துகள் ஆடி மேற்கொண்டு தன் டெஸ்ட் போட்டி வாய்ப்பை சிக்கலாக்கிக் கொண்டு இருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
ராகுல் சொதப்பினாலும், ரஹானே 64, ஹனுமா விஹாரி 53 ரன்கள் சேர்க்க, இந்திய அணி 168 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. 468 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடத் தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 45 ரன்களுக்கு 2 விக்கெட்கள் இழந்து அந்த அணி பேட்டிங் செய்து வருகிறது.