ஐபிஎல் அணி கேப்டன்
ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த 2017 - 2018ஆம் ஆண்டுகளில் இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற்றார். ஆறு போட்டிகளில் இரண்டு அரைசதம் அடித்தார். அதன் பின் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில், ஐபிஎல் அணியான டெல்லி கேபிடல்ஸ்க்கு கேப்டனாக கூட நியமிக்கப்பட்டார்.
18 மாத இடைவெளி
ஆனால், இந்திய அணி வாய்ப்பு என்பது அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. சுமார் 18 மாதங்கள் கழித்து வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெற்றார்.
டி20 தொடரில் இல்லை
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், ஒரு போட்டியில் கூட களமிறங்கும் வாய்ப்பை பெறவில்லை ஸ்ரேயாஸ் ஐயர். மூன்றாவது போட்டியில் மூத்த வீரர்களை நீக்கி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போதும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
முதல் ஒருநாள் போட்டி
இந்த நிலையில், ஒருநாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல, முதல் ஒருநாள் போட்டியில் இடம் பெற்றார் ஸ்ரேயாஸ் ஐயர். வெஸ்ட் இண்டீஸ் அணி 13 ஓவர்கள் பேட்டிங் செய்த நிலையில், அந்தப் போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இன்னும் 2 போட்டிகள்
இன்னும் இரண்டு ஒருநாள் போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. அதில் அவருக்கு அணியில் இடம் கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. ஆனால், வெறும் இரண்டு போட்டிகளில் அவரால் தன் திறமையை காட்டி விட முடியுமா? போட்டியில் அதற்கு ஏற்ற சூழ்நிலைகள் கிடைக்குமா? என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.
ஒரே வழி இதுதான்
ஒருவேளை இந்த இரண்டு போட்டிகளில் ரன் குவிக்காமல் போனால், ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பை இழக்க நேரிடலாம். இதை தவிர்க்க அவருக்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. மிடில் ஆர்டரில் களமிறங்க உள்ள ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்ய அதிக ஓவர்கள் கிடைத்தால் ஒரு சதம் அடிக்க வேண்டும். ஏற்கனவே, இரண்டு அரைசதம் அடித்தும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில், சதம் அவரை காப்பாற்றலாம். இக்கட்டான நிலையில் இருக்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர்.