பயிற்சிப் போட்டி
வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 297-6, இரண்டாம் இன்னிங்க்ஸில் 188-5 ரன்கள் குவித்து இரு முறையும் டிக்ளர் செய்து இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி 181 ஆல்-அவுட், 47-3 ரன்கள் எடுத்தது. போட்டி டிராவில் முடிந்தது.
|
அஸ்வின், ஷமி புறக்கணிப்பு
இது வெறும் பயிற்சிப் போட்டி என்பதால் இந்திய உத்தேச அணியில் இடம் பெற்ற அனைத்து வீரர்களும் வாய்ப்பு பெற்றனர். ஒருவரைத் தவிர. அவர் முகமது ஷமி. அஸ்வினும் முதல் இன்னிங்க்ஸில் வாய்ப்பு பெறாமல் தான் இருந்தார். எனினும், இரண்டாம் இன்னிங்க்ஸில் கடைசி நேரத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஷமிக்கு ஓவரே இல்லை
அஸ்வின் 8 ஓவர்களும், பேட்டிங் செய்யவும் வாய்ப்பு பெற்ற நிலையில், ஷமிக்கு ஒரு ஓவர் கூட வீச வாய்ப்பு கிடைக்கவில்லை. ஷமி ஒருநாள் போட்டிகளில் ஆடினார் என்பதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கலாம் என முதலில் கூறப்பட்டது.
சைனிக்கு வாய்ப்பு
அதே சமயம், உத்தேச டெஸ்ட் அணியில் இடம் பெறாத நவ்தீப் சைனிக்கு இந்த பயிற்சிப் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இது பலரது புருவத்தையும் உயர்த்தியது. ஷமிக்கு வாய்ப்பு அளிக்க முடியாத போது, டெஸ்ட் அணியிலேயே இல்லாத ஒருவருக்கு ஏன் வலிந்து வாய்ப்பு கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுந்தது.
|
ஷமிக்கு இடம் உண்டா?
இதனால், ஷமிக்கு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்குமா? என கேட்டு வருகிறார்கள். டெஸ்ட் அணியில் பும்ரா, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஷமி இடம் பெற்றுள்ளனர். இவர்களில் மூவர் டெஸ்ட் போட்டியில் களம் இறங்குவார்கள். பயிற்சியில் மற்ற மூவர் வாய்ப்பு பெற்ற நிலையில், ஷமிக்கு டெஸ்ட் அணியில் இடம் உண்டா? என்று தெரியவில்லை.
உமேஷ் யாதவ் உள்ளே
முதலில் உமேஷ் யாதவ் மாற்று வீரராக இருப்பார் என கூறப்பட்டது. ஆனால், அவர் பயிற்சிப் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். அதனால், அதை காரணம் காட்டியே அணியில் இழுத்து விடுவார்கள்.
|
என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்
ரவி சாஸ்திரி - கோலி இருக்கும் வரை அணியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஒரு வீரர் உறுதி என நாம் நினைத்துக் கொண்டு இருக்கும் போதே அவருக்கு அணியில் இடம் இல்லாமலும் போகலாம் என்பதே ரசிகர்கள் கருத்தாக உள்ளது.