டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் கடந்த சில ஆண்டுகளாக பெரும் சரிவில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த படுதோல்வி, அந்த அணியின் தன்னம்பிக்கையை மேலும் உடைத்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில், அந்த அணியின் மூன்று தலைசிறந்த ஜாம்பவான்களான சர் விவியன் ரிச்சர்ட்ஸ், பிரையன் லாரா மற்றும் ரிச்சி ரிச்சர்ட்சன் ஆகியோர், தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சந்தித்து, அவர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் அறிவுரைகளை அளித்து உள்ளனர்.
டெல்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்த ஜாம்பவான்கள் கேப்டன் ராஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, "மாற்றம் என்பது சுயநம்பிக்கையில் இருந்துதான் தொடங்குகிறது" என்ற ஆலோசனையை வழங்கியுள்ளனர்.

இந்த மறக்க முடியாத சந்திப்பு குறித்து, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாகப் பேசிய கேப்டன் ராஸ்டன் சேஸ், தனது மகிழ்ச்சியையும், அவர்கள் அளித்த நம்பிக்கையையும் பகிர்ந்துகொண்டார்.
"ஆம், நேற்று எங்களுக்கு ஒரு டீம் மீட்டிங் இருந்தது. அந்த மூவருடனும் (ரிச்சர்ட்ஸ், லாரா, ரிச்சர்ட்சன்) பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. 'தன்னம்பிக்கையை இழக்காதீர்கள், இப்போது நாம் சரிவில் இருக்கலாம், ஆனால் நிலைமை நிச்சயம் மாறும்' என்று அவர்கள் கூறினார்கள்" என்று ராஸ்டன் சேஸ் தெரிவித்தார்.
"அந்த மாற்றம் இப்போதே தொடங்கலாம், அது ஒவ்வொரு வீரரின் நம்பிக்கையிலும், மனப்பான்மையிலும்தான் இருக்கிறது. நாங்கள் நேர்மறையான கிரிக்கெட்டை விளையாடி, இந்தச் சூழலை மாற்ற வேண்டும் என்று அவர்கள் அறிவுரை கூறினார்கள்" என்று சேஸ் மேலும் கூறினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் சரிவுக்கு என்ன காரணம் என்று கேட்டபோது, ராஸ்டன் சேஸ் நேர்மையாகப் பதிலளித்தார். "என்னைப் பொறுத்தவரை, தன்னம்பிக்கை மற்றும் தரமான உள்ளூர் முதல் தரப் போட்டிகளில் போதுமான அளவு விளையாடாதது தான் காரணம். நீங்கள் எவ்வளவு அதிகமாக நல்ல பந்துவீச்சை எதிர்கொள்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அழுத்தத்தைக் கையாளக் கற்றுக்கொள்வீர்கள்" என்று அவர் கூறினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் தன்னம்பிக்கைக் குறைவு இல்லை என்பதை கூறிய சேஸ், "ஒரு வீரர் சிறப்பாக ஆடி 50 அல்லது 100 ரன்களை அடித்துவிட்டால், அது ஒட்டுமொத்த அணிக்கும் ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுக்கும். பேட்டிங் யூனிட்டாக நாங்கள் இந்தத் தொடரைச் சரியாகத் தொடங்கவில்லை. ஒரு சில வீரர்கள் தங்களது தொடக்கத்தை ஒரு பெரிய ஸ்கோராக மாற்றினால் போதும், நிலைமை முற்றிலும் மாறிவிடும்" என்றார்.
தனது தனிப்பட்ட அர்ப்பணிப்பு குறித்துப் பேசிய சேஸ், "எனக்கு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவதுதான் எப்போதும் கனவாக இருந்தது. நான் ஃபிரான்சைஸ் கிரிக்கெட் வாய்ப்புகளை அதற்காகவே விட்டுக்கொடுத்தேன். இப்போது கேப்டன் பொறுப்பை ஏற்றிருப்பது ஒரு பெரிய பொறுப்பு. நான் அந்த மெரூன் தொப்பியை அணிய விரும்புகிறேன், அதற்காக எனது முழு உழைப்பையும் கொடுப்பேன்" என்று உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்தார்.