டெல்லி: டெல்லியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி குவித்த 518 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை நோக்கித் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ரவீந்திர ஜடேஜாவின் சுழற்பந்து வீச்சில் சிக்கி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்து இருக்கிறது. இதில் எதிர்பார்க்காத திருப்பமாக, முதல் டெஸ்ட்டில் படுமோசமாகச் சரிந்த வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் வரிசை, இந்த முறை போராட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. அந்த அணி ஃபாலோ-ஆனை தவிர்த்தால் அது இந்திய அணிக்கு சிறிய பின்னடைவை ஏற்படுத்தும்.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில், இந்திய அணி பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தியது. 318/2 என்ற ஸ்கோருடன் ஆட்டத்தைத் தொடங்கிய இந்தியா, 518 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

இரட்டை சதத்தை நோக்கி முன்னேறிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 175 ரன்கள் எடுத்து துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனாலும், கேப்டன் சுப்மன் கில் 129 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்குத் துணையாக நிதிஷ் ரெட்டி (43), துருவ் ஜுரல் (44) ஆகியோர் முக்கியப் பங்களிப்பை அளித்தனர். இதன்மூலம் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணி 518 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை எடுத்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்துக் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பம் முதலே இந்தியப் பந்துவீச்சாளர்கள், குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள், பெரும் நெருக்கடி கொடுத்தனர். ஆட்டத்தின் 7-வது ஓவரிலேயே, ஜான் கேம்ப்பெல் (10) ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடிய மற்றொரு தொடக்க வீரர் டேகனரைன் சந்தர்பால் (34), ஜடேஜாவின் சுழலில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதிரடியாக ஆட முயன்ற அலிக் அதானேஸ் (41), குல்தீப் யாதவின் சுழலில் ஆட்டமிழந்தார்.
அதைவிட முக்கியமாக, வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ் (0), ஜடேஜாவின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். 107 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி சரிவைச் சந்தித்தது.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. ஆனால், முதல் டெஸ்ட் போட்டியை ஒப்பிடும்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த முறை சற்று அதிக ரன்களை எடுக்க வாய்ப்பு உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 146 மற்றும் 162 ரன்களே எடுத்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.
ஆனால், இந்த முறை 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து இருக்கிறது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட இன்னும் 378 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஃபாலோ-ஆனைத் தவிர்க்க வெஸ்ட் இண்டீஸ் அணி குறைந்தபட்சம் 319 ரன்கள் எடுக்க வேண்டும். அதற்கு இன்னும் 179 ரன்கள் தேவை.
கைவசம் 6 விக்கெட்டுகள் மட்டுமே உள்ள நிலையில், ஷாய் ஹோப் (31*) மற்றும் டெவின் இம்லாச் (14*) ஆகியோர் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னும் 179 ரன்கள் எடுப்பது சவாலாக பார்க்கப்பட்டாலும் மூன்றாம் நாள் ஆட்டத்தின் முதல் செஷன், இந்தப் போட்டியின் முடிவைத் தீர்மானிக்கும்.
இந்தியச் சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் தொடர்ந்தால், வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபாலோ-ஆன் பெறுவது உறுதியாகிவிடும். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 319 ரன்கள் எடுத்தால் பின்னர் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்து குறைந்தது 250 ரன்கள் எடுக்க வேண்டும்.