போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்தியா-மேற்கிந்திய தீவுகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்திலும் மழை குறுக்கிட்டதால் 2-வது நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது.
இந்தியா-மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ட்ரினிடாட்டில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயின் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் நாளில் 22 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன் எடுத்து இருந்தது. இதனிடையே தொடர் மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. களத்தில் பிராத்வெயிட் 32 ரன்னிலும், சாமுவேல்ஸ் 4 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், நேற்று தொடங்கிய 2-ம் நாள் ஆட்டமும் மழையால் முழுமையாக பாதிக்கப்பட்டது. தொடக்கம் முதலே மழை விட்டு விட்டு பெய்ததால் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுவதுமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
2 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் 22 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டுள்ளதால், இப்போட்டில் டிராவில் முடிவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.