மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரிட் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கக் கூடாது என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் கன்சிஸ்டன்சி மிகவும் அவசியம் கூறிய ராபின் உத்தப்பா, சில நேரங்களில் காயம் அடைந்துவிடுவோமோ என்ற எண்ணத்தை அதிகமாக மனதில் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அக்டோபரில் தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பும்ரா விளையாடுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. ஏனென்றால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது காயம் அடைந்த பும்ரா, கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்பாக நாடு திரும்பினார்.

இதன்பின் பும்ரா சுமார் ஒன்றரை மாதங்களாக ஓய்வில் இருந்து வரும் நிலையில், என்சிஏ ஃபிட்னஸை நிரூபித்துள்ளார். அதன்பின் ஆசியக் கோப்பையில் ஆடி வரும் பும்ரா, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் விளையாட தயாராக இருப்பதாக பிசிசிஐ தரப்பிடம் தெரிவித்தார். ஆனாலும் சொந்த மண்ணில் 2 போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பேசுகையில், எனக்கு தெரிந்தவரை பும்ரா ஒரு போட்டியில் விளையாடுவார் என்று நினைக்கிறேன். அதேபோல் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்றாலும் பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு எந்த இழப்பும் இல்லை. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் கன்சிஸ்டன்சி மிகவும் அவசியம்.
அப்போதுதான் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்படும் பயிற்சியின்மையை தடுக்க முடியும். கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சாளர்கள் மீண்டும் பயிற்சியை தொடங்குவது எளிதல்ல. அதற்கான மிகப்பெரிய உழைப்பை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். அதனால் பும்ரா கன்சிஸ்டன்சியுடன் விளையாட வேண்டிய அவசியம் இருக்கிறது.
காயம் ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணமே பயிற்சியை கட்டுப்படுத்தும். அதனால் பயிற்சி, களத்தில் விளையாடுவது மற்றும் ஓய்வு ஆகியவற்றுக்கு இடையில் நல்ல பேலன்ஸ் இருக்க வேண்டும். இந்திய அணி இப்போது சரியான மனநிலையில் இருக்கிறது. யாருக்கு எப்போது ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒயிட் பால் கிரிக்கெட் தொடரில் 5 போட்டிகளில் அல்லாமல் 3 டி20 போட்டிகளில் விளையாடுவார் என்று நம்புகிறேன். ஏனென்றால் அர்ஷ்தீப் சிங்கும் இருக்கிறார். மீண்டும் முகமது ஷமி டி20 கிரிக்கெட் அணிக்கு திரும்புவாரா என்பது சந்தேகம் தான். ஆனால் சிராஜ்க்கு வாய்ப்பு அளிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.