அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் வாய்ப்பை தவறவிட்டார். கடைசி விக்கெட்டை வீழ்த்தக் கூடாது என்று பும்ரா மோசமாக பவுலிங் செய்த போதும், அடுத்த ஓவரில் சிராஜ் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் மிஸ் செய்தார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ராஸ்டன் சேஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சிராஜ் வேகத்தில் சின்னாபின்னமாகினர்.

டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா வேகத்தில் மிடில் ஆர்டர் காலியானது. இறுதியாக 162 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த இன்னிங்ஸில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த நிலையில், 5 விக்கெட்டுகளை வீழ்த்த பும்ரா உதவி செய்தார். அதாவது வெஸ்ட் இண்டீஸ் அணி 155 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து ஆடி வந்தது. அப்போது 41வது ஓவரை வீசிய பும்ரா, அந்த ஓவரின் 2வது பந்திலேயே ஜோகன் லேன் விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் 9வது விக்கெட்டை வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்தது.
இதனால் அடுத்த 4 பந்தையும் பும்ரா யார்க்கராக வீசாமல், ஆஃப் ஸ்டம்ப் லைனிற்கு வெளியிலேயே வீசினார். இதனால் பும்ரா வேண்டுமென்றே விழ்த்திவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்ததாக தெரிகிறது. ஆனாலும் சிராஜ் வீசிய ஓவரில் விக்கெட் கிடைக்கவில்லை. இறுதியாக குல்தீப் யாதவ் அட்டாக்கில் வந்து ஒரே பந்தில் கடைசி விக்கெட்டை கைப்பற்றினார்.
இதனால் சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் வாய்ப்பை மிஸ் செய்தார். ஐபிஎல் தொடரில் அகமதாபாத் மைதானத்தில் சிராஜ் அதிகளவிலான போட்டிகளில் விளையாடி வருகிறார். குஜராத் அணிக்காக ஆடுவதால், எந்த லைன் மற்றும் லெந்தில் வீச வேண்டும் என்பதை நன்றாக அறிவார். இதனால் புதிய பந்தில் சிராஜ் வழக்கம் போல் தனது மேஜிக்கை காட்டிவிட்டதாக பார்க்கப்படுகிறது.