இந்தியா பேட்டிங்
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் 159, ராகுல் 102 ரன்கள் குவித்து மிகப் பெரிய துவக்கத்தை இந்திய அணிக்கு ஏற்படுத்திக் கொடுத்தனர்.
கோலி டக் அவுட்
ராகுல் ஆட்டமிழந்த உடன் வந்த விராட் கோலி தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் மின்னல் வேகத்தில் அதிரடி ஆட்டம் ஆடினர்.
இமாலய இலக்கு
இந்தியா 50 ஓவர்களில் 387 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 388 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணியின் நிக்கோலஸ் பூரன் மிடில் ஆர்டரில் அதிரடி காட்டினார்.
பூரன் விக்கெட்
அப்போது இந்தியா இக்கட்டான நிலையில் இருந்தது. நிக்கோலஸ் பூரன் விக்கெட்டை எடுத்தால் தான் திருப்பம் ஏற்படும் என்ற நிலையில், முகமது ஷமி வீசிய 30வது ஓவரில் பூரன் ஆட்டமிழந்தார்.
பொல்லார்டு டக் அவுட்
அவர் சென்ற பின் அடுத்து அந்த அணியின் கேப்டன் கீரான் பொல்லார்டு பேட்டிங் செய்ய வந்தார். அவர் அடுத்த பந்திலேயே, தான் சந்தித்த முதல் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்தியாவுக்கு இது பெரிய திருப்பமாக மாறியது.
இந்தியா வெற்றி
பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி 280 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இரண்டு அணிகளின் கேப்டன்களும் கோல்டன் டக் அவுட் ஆன நிலையில், ஒரு மோசமான சாதனை செய்யப்பட்டது.
கோல்டன் டக் அவுட் சாதனை
இதுவரை ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் இரு கேப்டன்கள் ஒரே போட்டியில் கோல்டன் டக் அவுட் ஆனதே கிடையாது. அந்த சாதனையை முதன் முதலில் செய்த பெருமை விராட் கோலி - கீரான் பொல்லார்டு ஜோடிக்கே கிடைத்துள்ளது.
அதிர்ச்சி
விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் இருக்கிறார். கீரான் பொல்லார்டு அதிரடி பேட்ஸ்மேன். இவர்கள் இருவரும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தது ஒரு அணிகளுக்கும் அதிர்ச்சி அளித்தது.
காப்பாற்றிய பண்ட், ஸ்ரேயாஸ்
கோலி டக் அவுட் ஆகி ஆட்டமிழந்தாலும் இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பண்ட் அதிரடியாக ரன் குவித்து இந்திய அணியை பெரிய ஸ்கோரை எட்டச் செய்தனர்.
வெ.இண்டீஸ் அணிக்கு பாதிப்பு
அதே சமயம், பொல்லார்டு டக் அவுட் ஆனது அந்த அணியை பெரிய அளவில் பாதித்தது. அவருக்கு பின் பேட்ஸ்மேன்கள் இல்லை என்பதால் அந்த அணி தோல்வி அடைந்தது.