அகமதாபாத்: சுமார் 148 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த வீரரும் செய்யாத ஒரு விசித்திரமான சாதனையை இந்திய வீரர் கே.எல். ராகுல் படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் சதம் அடித்தார். பின்னர் சரியாக 100 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் மூலம் அவர் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.
ஒரே ஆண்டில், இரண்டு முறை டெஸ்ட் போட்டிகளில் சரியாக 100 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் பெற்றுள்ளார். எப்படி இது சாத்தியம்? இதற்கு முன் எப்போது அவர் சரியாக 100 ரன்களில் ஆட்டமிழந்தார்? என்று பார்க்கலாம்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அகமதாபாத் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான நேற்று, கே.எல். ராகுல் தனது 11-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். 197 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 100 ரன்களை எட்டிய அவர், சதம் அடித்த அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இதற்கு முன்பு, கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியிலும், ராகுல் சரியாக 100 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம், ஒரே ஆண்டில் இரண்டு முறை சதமடித்த உடனே ஆட்டமிழந்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், தனது டெஸ்ட் வாழ்க்கையில் இரண்டு முறை 100 ரன்களில் ஆட்டமிழந்த 7-வது வீரர் ராகுல் ஆவார். இந்தச் சாதனை ஒருபுறம் வியப்பை ஏற்படுத்தினாலும், சதம் அடித்த உடனேயே ஆட்டமிழப்பது ராகுலுக்கு மீண்டும் ஒருமுறை நிகழ்ந்துள்ளது கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சதத்தை எட்டிய பிறகு, தனது வழக்கமான கொண்டாட்டத்தை வெளிப்படுத்திய ராகுல், அது தனது மகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்று போட்டி முடிந்த பிறகு தெரிவித்தார். 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் அவர் அடிக்கும் முதல் டெஸ்ட் சதம் இதுவாகும். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் அவர் அடிக்கும் இரண்டாவது டெஸ்ட் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் நாள் ஆட்டத்துக்கு பிறகு தனது பேட்டிங் குறித்து பேசிய ராகுல், "எனது பேட்டிங்கை நான் மிகவும் ரசித்து விளையாடினேன். இங்கிலாந்து போன்ற வெவ்வேறு சூழ்நிலைகளில் விளையாடியது எனது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. ரன்கள் அடித்த கையோடு இந்தத் தொடரில் களமிறங்கியதும் உதவியாக இருந்தது. தொடருக்குப் பின் கிடைத்த நீண்ட ஓய்விற்குப் பிறகு புத்துணர்ச்சியுடன் உணர்கிறேன்" என்று கூறினார்.
மேலும் அவர், "கடந்த வாரம் இந்தியா 'ஏ' அணிக்காக விளையாடியதால், பெரிய அளவில் பதற்றம் இல்லை. மீண்டும் ஆட்டத்தின் ஓட்டத்திற்குத் திரும்புவதும், ஒவ்வொரு நாளும் 4-5 நாட்கள் களத்தில் நிற்பதும் உடல் ரீதியாகச் சவாலானது. இங்குள்ள சூழல் உடல் ரீதியாக மிகவும் சவாலாக இருந்தது. ஆனால் களத்தில் நிற்பது மகிழ்ச்சியாக இருந்தது. அந்தப் பயிற்சி ஆட்டம் எனக்கு மிகவும் உதவியது" என்று குறிப்பிட்டார்.
இந்த ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 10 இன்னிங்ஸ்களில் 53.20 சராசரியுடன் இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு அரைசதங்கள் உட்பட 532 ரன்கள் குவித்து, அந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த மூன்றாவது வீரராக ராகுல் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.