அகமதாபாத்: இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல், தனது அபாரமான ஃபார்மை மீண்டும் ஒருமுறை நிரூபித்து, 2025-ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அகமதாபாத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், நிதானமான அரைசதம் அடித்ததன் மூலம், இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்டைப் பின்னுக்குத் தள்ளி அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதன் பின்னர் சதமும் அடித்து அசத்தினார் ராகுல்.
இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் பென் டக்கெட் மற்றும் கே.எல்.ராகுல், இருவருமே போட்டி போட்டுக்கொண்டு ரன்களைக் குவித்து வந்தனர். அகமதாபாத் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு, 2025 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த தொடக்க வீரர்கள் பட்டியலில் பென் டக்கெட் 602 ரன்களுடன் முதல் இடத்தில் இருந்தார்.

ஆனால், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்தப் போட்டியில் சதம் அடித்த கே எல் ராகுல் 649ரன்களுடன் முதலிடத்தைப் பிடித்து, இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் தொடக்க வீரர் என்ற பெருமையைத் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில், இந்தியாவின் மற்றொரு இளம் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் (479 ரன்கள்) மூன்றாவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா (461 ரன்கள்) மற்றும் இங்கிலாந்தின் சாக் கிராலி (414 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.
அகமதாபாத் டெஸ்டின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், கே.எல். ராகுல் 114 பந்துகளைச் சந்தித்து 6 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இரண்டாம் நாள் ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய கே எல் ராகுல் தனது 11வது டெஸ்ட் சதத்தை கடந்தார்.
முன்னதாக, ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தது. ஜெய்ஸ்வால், ஆரம்பத்தில் நிதானமாக ஆடினாலும், பின்னர் அதிரடியாக மாறி 54 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
டெஸ்ட் தொடக்க வீரராக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலிலும் கே.எல். ராகுல் மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில், இந்திய கேப்டன் சுப்மன் கில் மற்றும் ஜிம்பாப்வேயின் சீன் வில்லியம்ஸ் ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.
இந்த ஆண்டு முழுவதும் ராகுல் சிறப்பான ஃபார்மில் இருந்து வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 137 ரன்களும், லார்ட்ஸ் மைதானத்தில் சதமும் அடித்தார் ராகுல். தொடர்ச்சியாக ரன்களைக் குவித்து வரும் கே.எல். ராகுலின் இந்த ஃபார்ம், இந்திய டெஸ்ட் அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.