டெல்லி: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம், இந்தியாவின் ஆதிக்கத்தால் பரபரப்பாகச் சென்று கொண்டிருந்த நிலையில், மதிய உணவு இடைவேளைக்குச் சற்று முன்பு கே எல் ராகுல் செய்த சம்பவத்தால் மைதானத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்திய அணியின் மூத்த வீரர் கே.எல். ராகுல், விளையாட்டுத்தனமாக பெயில்ஸை தட்டிவிட, ஆட்டம் முடிந்துவிட்டதாக நினைத்து வீரர்கள் பெவிலியன் திரும்ப முயன்றனர்.
போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் முடிவடையும் தருவாயில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் இன்னிங்ஸின் 71-வது ஓவர் முடிந்தவுடன் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இந்திய வீரர்கள் அனைவரும், முதல் செஷன் முடிந்துவிட்டதாகக் கருதி, மதிய உணவு இடைவேளைக்காக ஓய்வறையை நோக்கி நடக்கத் தொடங்கினர். வர்ணனையாளர் முரளி கார்த்திக் கூட, இடைவேளை வந்துவிட்டதாக நினைத்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோர்கார்டை வாசிக்கத் தொடங்கினார்.
அப்போதுதான், இன்னும் ஒரு ஓவர் மீதமிருப்பதை உணர்ந்த நடுவர், வீரர்களை மீண்டும் களத்திற்கு வருமாறு அழைத்தார். இதனால், மைதானத்தில் ஒரு சில நிமிடங்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழப்பம் நிலவியது. இந்தக் குழப்பத்திற்கு யார் காரணம் என்று தெரியாமல் இருந்த நிலையில், ஒளிபரப்பாளர்கள் பின்னர், கே.எல். ராகுல்தான் விளையாட்டுத்தனமாக பெயில்ஸை தட்டிவிட்டார் என்பதை உறுதி செய்தனர். அவரது இந்தச் செயல் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்தக் கலகலப்பான சம்பவத்திற்கு மத்தியில், இந்திய அணி போட்டியின் மீது தனது பிடியை முழுமையாக இறுக்கியிருந்தது. மூன்றாம் நாள் ஆட்டத்தின் காலைப் பொழுதில், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தனது பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் வரிசையைச் சரித்தார்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, 270 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி ஃபாலோ-ஆன் கொடுத்தது. இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.