டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி முழுமையாக வென்று ஒயிட்வாஷ் செய்திருக்கிறது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி 61.90 வெற்றி சதவீதத்துடன் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது.
இந்த நிலையில் இந்த தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட ஜடேஜா பேட்டிங்கில் ஒரு சதம் உள்ளிட்ட 104 ரன்களும், பவுலிங்கில் 8 விக்கெட்டும் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்று இருக்கிறார். ஜடேஜா இங்கிலாந்து தொடரில் இருந்து தற்போது சிறப்பாக பேட்டிங் விளையாடி வருகிறார்.

டி20 போட்டிகளில் இருந்து ஜடேஜா ஓய்வு பெற்ற நிலையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பட்டையை கிளப்பி வருகிறார். இது குறித்து பேசிய ஜடேஜா, அஸ்வின் தற்போது இல்லாததால் எனக்கு அதிக அளவு பந்து வீச வாய்ப்பு கிடைக்கின்றது. எங்கள் அணி பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
கடந்த ஆறு மாதமாக எங்கள் அணியில் பல நல்ல அறிகுறிகள் தென்படுகிறது. என்னைக் கேட்டால் நான் இப்போது விளையாடுவது தான் மிகச்சிறந்த பேட்டிங் என்று நினைக்கின்றேன். கம்பீர் பயிற்சியாளராக வந்த பிறகு பேட்டிங் வரிசையில் எனக்கு ஆறாவது இடத்தை வழங்கினார். அதுதான் இந்த மாற்றத்திற்கு காரணம் என நினைக்கின்றேன்.
நான் எப்போதும் கீழ்வரிசையில் களமிறங்குவதால் என்னுடைய மனநிலை வித்தியாசமாக இருக்கும். ஆனால் தற்போது ஆறாவது வீரராக களமிறங்குவதால், ஒரு பேட்ஸ்மேன் போல் உணர்கின்றேன். களத்தில் அதிக நேரம் செலவிட்டு ரன்களை சேர்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன். நான் சாதனைகள் ரெக்கார்டுகள் குறித்து யோசிப்பதே கிடையாது. என் அணியின் வெற்றிக்கு நான் பங்களிக்க வேண்டும்.
இது என்னுடைய மூன்றாவது தொடர் நாயகன் விருது என்று நினைக்கின்றேன். இதை வீட்டுக்கு எடுத்துச் செல்வது மகிழ்ச்சி என்று ஜடேஜா கூறியுள்ளார். 36 வயதான ஜடேஜா தற்போது வரை 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3990 ரன்களையும், 338 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 204 போட்டி விளையாடிய நிலையில் தற்போது ஆஸ்திரேலிய தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.