இந்தியா - வெ.இண்டீஸ் தொடர்
இந்தியா - வெ.இண்டீஸ் தொடருக்கான அணித் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ரிஷப் பண்ட் குறித்த பேச்சு மீண்டும் அடிபடத் துவங்கி உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் பண்ட் நிச்சயம் விக்கெட் கீப்பராக இடம் பெறுவார்.
தன்னை நிரூபிப்பாரா?
ஆனால். வெஸ்ட் இண்டீஸ் தொடரிலாவது ரன் குவித்தும், விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டும் இளம் வீரர் ரிஷப் பண்ட் தன்னை நிரூபிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த தொடருக்குப் பின்னும் இந்திய அணி நிர்வாகம் அவருக்கு கருணை காட்டாது.
உலகக்கோப்பை தொடர்
2019 உலகக்கோப்பை தொடரில் அதிரடி வீரர் ரிஷப் பண்ட்டை சேர்க்க வேண்டும் என பெரும் ரசிகர் கூட்டம் இணையத்தில் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பியது. அவரும் அணியில் சேர்க்கப்பட்டார். அந்த தொடரில் அவர் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை.
பேட்டிங்கில் சறுக்கல்
அடுத்து வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்தில் தொடர்ந்து டி20 தொடர், ஒருநாள் தொடர், டெஸ்ட் தொடர் என அனைத்திலும் அதிரடி ஆட்டம் ஆட ஆசைப்பட்டு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வந்தார்.
நம்பிக்கை இழந்தார்
அவர் மீது கடும் விமர்சனம் எழுந்தது. மேலும், தோனிக்கு மாற்றாகவே அவர் அணியில் இருப்பதால் ரசிகர்கள், தோனியுடன் ஒப்பிட்டு, ரிஷப் பண்ட்டை கடுமையாக விமர்சித்தார்கள். மேலும், கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவரை கடுமையாக விமர்சித்தார்கள். அதனால், நம்பிக்கை இழந்து காணப்பட்டார் பண்ட்.
தென்னாப்பிரிக்கா தொடரில் சொதப்பல்
தென்னாப்பிரிக்கா தொடரில் அதிரடி ஆட்டம் ஆடாவிட்டாலும், தன் இயல்பான ஆட்டமும் இல்லாமல், நிதான ஆட்டமும் ஆட முடியாமல் சொதப்பினார். முன்னாள் வீரர்கள் பலரும் அவர் மீதான விமர்சனத்தால் தான் அவர் தன்னம்பிக்கை இழந்து இருக்கிறார். அவரது இயல்பான ஆட்டத்தை ஆட விட வேண்டும் என கூறினர்.
தொடர்ந்து வாய்ப்பு
தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அடுத்து நடந்த வங்கதேச டி20 தொடரில் அவரே விக்கெட் கீப்பராக தொடர்ந்தார். இனி டெஸ்ட் அணியில் அவர் இடம் பெறாவிட்டாலும், டி20 அணியில் அதிக வாய்ப்பு கொடுக்கப்படும் என தேர்வுக் குழு அறிவித்தது.
சஞ்சு சாம்சன் வாய்ப்பு
அதே வங்கதேச தொடரில் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் களமிறங்க வாய்ப்பு இல்லாமல் காத்திருப்பில் இருந்தார். அப்போதும், ரிஷப் பண்ட் சுதாரிக்கவில்லை. வங்கதேச தொடரிலும் சொதப்பல் ஆட்டத்தை தொடர்ந்தார். அதுவும் பேட்டிங் மட்டுமில்லாமல், பீல்டிங்கிலும் படுமோசமாக சொதப்பினார்.
ஐபிஎல்-லுக்கு பின்..
ஒரு பக்கம் சஞ்சு சாம்சன் எப்போது வேண்டுமானாலும் போட்டிகளில் களமிறங்கி தன்னை நிரூபிப்பார் என்பது ஒருபுறம் இருக்க, 2020 ஐபிஎல் தொடருக்குப் பின் தோனி மீண்டும் தன் அதிரடி ஆட்டத்தை ஆடினால், அவரை அணியில் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
அதிகரிக்கும் அழுத்தம்
இந்தப் பக்கம் அனுபவ வீரர் தோனி, அந்தப் பக்கம் சஞ்சு சாம்சன் என ரிஷப் பண்ட் கடும் அழுத்தத்துக்கு நடுவே இருக்கிறார். அவருக்கு இன்று கிடைத்திருக்கும் வாய்ப்பு வேறு எந்த வீரருக்கும் கிடைக்காது. வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் ஒரு அரைசதம் அடித்தாலும் அவர் நிலை மாறிவிடும். வாய்ப்பை சரியாக பயன்படுத்துவாரா பண்ட்?