இரண்டாவது ஒருநாள் போட்டி
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் வெளுத்து வாங்கியது. கோலி தவிர அனைத்து பேட்ஸ்மேன்களும் ரன் குவிப்பில் மிரட்டினர். அதில் பண்ட் குறைந்த ரன்களே எடுத்தாலும் அதிரடியில் எதிரணியை நிலைகுலைய வைத்தார்.
இந்தியா பேட்டிங்
இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்த முடிவு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சாதகமாகவே பார்க்கப்பட்டது. எனினும், இந்தியா பேட்டிங்கில் சிறப்பாக ஆடியது.
ரோஹித், ராகுல் சதம்
துவக்க வீரர்கள் ராகுல், ரோஹித் சர்மா போட்டியை முழுதாக தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டனர். 37வது ஓவர் வரை களத்தில் நின்ற இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. ராகுல் 102, ரோஹித் 159 ரன்கள் குவித்தனர்.
ரிஷப் பண்ட் பேட்டிங்
கோலி டக் அவுட் ஆனார். ஸ்ரேயாஸ் ஐயர் களத்தில் நிற்க, அப்போது பேட்டிங் செய்ய வந்தார் இளம் வீரர் ரிஷப் பண்ட். 44வது ஓவரில் களமிறங்கிய அவர் கடைசி நேரத்தில் அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.
முதலில் இரண்டு சிக்ஸர்
45வது ஓவரில் அல்சாரி ஜோசப் பந்துவீச்சில் இரண்டு சிக்ஸர் அடித்தார் பண்ட். அப்போதே ரசிகர்களை கவர்ந்து விட்டார் பண்ட். தொடர்ந்து அவர் ஓவருக்கு இரண்டு பவுண்டரி அடித்தால் கூட இந்தியா 350 ரன்களை கடந்து விடும் என்ற நிலை.
ஒரே ஓவரில் 24 ரன்கள்
அடுத்த ஷெல்டன் காட்ரல் வீசிய 46வது ஓவரில் பண்ட் இரண்டு சிக்ஸ், மூன்று ஃபோர் அடித்து அதிரடி காட்டினார் பண்ட். அந்த ஓவரில் மட்டும் 24 ரன்கள் கிடைத்தது. 13 பந்துகளில் 38 ரன்களை எட்டி ரசிகர்களை திக்கு முக்காட வைத்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் சிக்ஸ் மழை
அதுவரை ஒரு பந்துக்கு ஒரு ரன் என எடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர், பண்ட் அடித்த அடியைப் பார்த்து விட்டு, அடுத்த ஓவரில் நான்கு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து 31 ரன்கள் குவித்தார். இந்தியா அப்போதே 363 ரன்களை எட்டியது.
மிரட்டல் அடி
மிரட்டலாக ஆடிய ரிஷப் பண்ட் 16 பந்துகளில் 39 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த போது அவரது ஸ்ட்ரைக் ரேட் 243 ஆகும். பண்ட் அரைசதம் அடிக்காமல் ஆட்டமிழந்தாலும், அவரது அதிரடி ஆட்டம் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
இந்தியா ஸ்கோர்
இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் குவித்தது. ரோஹித் 159, ராகுல் 102, ஸ்ரேயாஸ் ஐயர் 53, பண்ட் 39 ரன்கள் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 388 ரன்கள் என்ற சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.