மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் தமிழக வீரர் சாய் சுதர்சன் மூன்றாவது வீரராக இன்று களம் இறங்கினார். ஆனால் 19 பந்துகளை எதிர்கொண்டு வெறும் ஏழு ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில், அவர் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் அவரை அணியை விட்டு நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சாய் சுதர்சன் இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகள் விளையாடி இருக்கிறார். இதில் மூன்று டெஸ்ட் போட்டிகள், இங்கிலாந்தில் நடந்தவை. இதுவரை 7 இன்னிங்ஸில் சாய் சுதர்சன் மொத்தமாகவே 147 ரன்கள் தான் அடித்திருக்கிறார். அதிகபட்சமாக மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 61 ரன்கள் அவர் சேர்த்தார். அவருடைய சராசரி வெறும் 21 என்ற அளவிலே இருக்கின்றது. இந்த ஏழு இன்னிங்ஸில் அவர் ஒரு அரை சதம் மட்டுமே அடித்திருக்கிறார். ஒருமுறை 30 ரன்கள், மறுமுறை 38 ரன்கள் அடித்திருக்கிறார்.

மேலும் இரண்டு டக் அவுட்டுகளும் ஒருமுறை 11 ரன்களும் அடித்துள்ளார். புஜாராவுக்கு மாற்று வீரராக சாய் சுதர்சன் அணியில் நீண்ட காலம் நீடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவருக்கு கிடைக்கும் பொன்னான வாய்ப்பை அவர் வீணடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய திலக் வர்மாவை இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆந்திராவைச் சேர்ந்த திலக் வருமா அண்மையில் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட்டில் எஸ்சக்ஸ் அணிக்கு எதிராக ஹாம்ப்சைர் அணிக்காக 241 பந்துகளை எதிர் கொண்டு சதம் அடித்திருந்தார்.
அது மட்டும் இல்லாமல் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் திலக் வர்மாவின் சராசரி 52 என்ற அளவில் இருக்கின்றது. ஆனால் சாய் சுதர்சனின் சராசரி வெறும் 40 என்று அளவிலே உள்ளது. இதனால் திலக் வர்மாவை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு தரக்கூடாது என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சாய் சுதர்சன் எஞ்சி இருக்கும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தினால் மட்டுமே அவர் அணியில் நீடிக்க முடியும்.