ஸ்ரேயாஸ் ஐயர் போராட்டம்
ஸ்ரேயாஸ் ஐயர் நீண்ட காலமாக ரஞ்சி தொடர்கள், இந்தியா ஏ அணிகளில் தொடர்ந்து இடம் பெற்று சிறப்பாக ஆடி வந்தார். 2017ஆம் ஆண்டுக்கு முன்பே தன்னை உள்ளூர் தொடர்களில் அடையாளம் காட்டினார்.
கிடைத்த வாய்ப்பு
2017ஆம் ஆண்டு இலங்கை ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைத்தது. அந்த தொடரில் மூன்று போட்டிகளில் இரண்டு அரைசதம் அடித்து அசத்தினார். அடுத்து தென்னாப்பிரிக்கா தொடரில் இரண்டு போட்டிகளில் களமிறங்கி பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை.
மீண்டும் தவிப்பு
அதையடுத்து அவர் அணியில் தன் வாய்ப்பை இழந்தார். மூத்த வீரர்கள் அணியில் இருந்ததால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மீண்டும் உள்ளூர் போட்டிகளில் தன் கவனத்தை செலுத்தினார். 5 இன்னிங்க்ஸ்களில் இரண்டு அரைசதம் அடித்த வீரருக்கு அணியில் வாய்ப்பு இல்லை என்பது துரதிர்ஷ்டவசமாக அமைந்தது.
ஐபிஎல் அதிரடி
2019 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக அணியை வழிநடத்திய ஸ்ரேயாஸ் ஐயர், பேட்டிங்கில் மிக முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்தார் ஸ்ரேயாஸ்.
நான்காம் வரிசை பேட்ஸ்மேன்
இந்திய அணியில் நீண்ட காலமாக சரியான பேட்ஸ்மேன் அமையாமல் சிக்கலாக இருந்த நான்காம் வரிசை பேட்டிங் செய்ய ஸ்ரேயாஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் சிறப்பாக ஆடி தன்னை நிரூபித்தார்.
5 அரைசதம்
இதுவரை 8 ஒருநாள் போட்டி இன்னிங்க்ஸ்களில் பேட்டிங் செய்துள்ள ஸ்ரேயாஸ் அதில் ஐந்து அரைசதங்கள் அடித்து வியப்பை ஏற்படுத்தி இருக்கிறார். மிடில் ஆர்டரில் இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக உருவாகி வருகிறார் ஸ்ரேயாஸ்.
வெ.இண்டீஸ் போட்டி
தற்போது நடந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் கோலி, ரோஹித் என மூத்த வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில், பண்ட்டுடன் சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்
பாராட்டு
ஸ்ரேயாஸ். 70 ரன்கள் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டார். இந்தியா இந்தப் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும் அவரது பேட்டிங் பாராட்டை பெற்றது.
டி20 தடுமாற்றம்
ஒருநாள் போட்டிகளில் கலக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், டி20 போட்டிகளில் நிலையான பேட்டிங் வரிசை இல்லாமல் மிடில் ஆர்டரில் கீழேயும், மேலேயும் பேட்டிங் செய்து ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். எனினும், கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஸ்ரேயாஸ் ஐயர் மீது அபார நம்பிக்கை வைத்துள்ளனர்.
கேப்டன் வாய்ப்பு
25 வயது ஆகும் ஸ்ரேயாஸ் ஐயர் டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடி, ஒருநாள் போட்டிகளில் தன் அசத்தல் பேட்டிங் பார்மை தொடரும் பட்சத்தில் இந்திய அணியில், விராட் கோலிக்கு பின் கேப்டன் பதவியை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.