கொல்கத்தா: 2026 டி20 உலகக் கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. அரையிறுதிக்குச் செல்லப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் காலிறுதிப் போட்டி போன்றது என்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்த நிலையில், இந்தப் போட்டி குறித்து பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவரும், முன்னாள் இந்திய கேப்டனுமான சவுரவ் கங்குலி இந்திய அணியை எச்சரித்துள்ளார். மேலும் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஒருவரின் செயல்பாடு குறித்தும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

சொந்த மண்ணில் நடைபெறும் போட்டி என்பதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் எனப் பலரும் கருதி வருகின்றனர். ஆனால் கங்குலி இதனை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், "இதை ஒருதலைப்பட்சமான போட்டி என்று கணிக்க முடியாது. இது 50-50 வாய்ப்பு உள்ள ஆட்டம். வெஸ்ட் இண்டீஸ் அணியில் பல ஆபத்தான பவர் ஹிட்டர்கள் உள்ளனர். அவர்களில் ஒன்று அல்லது இரண்டு பேர் நிலைத்து நின்றால் கூட ஆட்டத்தின் போக்கை அப்படியே மாற்றிவிடுவார்கள். எனவே இந்திய அணி தங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும்" என்று எச்சரித்துள்ளார்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியின் தற்போதைய ஃபார்ம் குறித்து கங்குலி கவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசுகையில், "வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சை பேட்டர்கள் தற்போது எளிதாகக் கணிக்கத் தொடங்கிவிட்டது சற்று கவலையளிக்கிறது. அவர் இந்திய அணியின் முக்கியமான விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர்.
ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், அவரை ஒரு ஆஃப் ஸ்பின்னராக நினைத்து எதிர்கொண்டால் ரன் குவிக்கலாம் என்பதை டிவால்ட் பிரெவிஸ் நிரூபித்துக் காட்டினார். இது இந்திய அணிக்குச் சற்று பின்னடைவாக அமையலாம்" என்று சுட்டிக்காட்டினார்.
அதேவேளையில், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீது கங்குலி மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். "பெரிய போட்டிகளில் பும்ராதான் இந்தியாவின் துருப்புச்சீட்டு. அவர்தான் அணியின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர். இந்த போட்டியிலும் அவரது பந்துவீச்சுதான் வெற்றியின் திறவுகோலாக இருக்கும்" என்று புகழ்ந்துள்ளார்.

கங்குலி மீண்டும் பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு ஈடன் கார்டன்ஸில் நடைபெறும் முதல் உலகக் கோப்பை போட்டி இதுவாகும். ரசிகர்களை உற்சாகப்படுத்தப் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 'வந்தே மாதரம்' பாடல் ஒலிக்கப்படும்போது, மைதானத்தில் உள்ள 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் தங்கள் செல்போன் டார்ச் லைட்டுகளை ஒளிரவிட்டு ஒரே குரலில் பாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேசபக்தி பாடல்களுடன் கூடிய லேசர் ஷோவும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு இருந்ததைப் போன்றே, இப்போதும் டிக்கெட்டுகளுக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.