கொல்கத்தா: 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பைப் போட்டியில், மீண்டும் வாழ்வா, சாவா என்ற கட்டத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வரும் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தச் சூப்பர் 8 ஆட்டம், ஒரு காலிறுதி ஆட்டம் போன்றதாகும்.
முந்தைய இரண்டு சூப்பர் 8 போட்டிகளில், இந்தியாவும் மேற்கிந்தியத் தீவுகளும் தலா ஒரு வெற்றியையும், ஒரு தோல்வியையும் சந்தித்தன. இரு அணிகளும் ஜிம்பாப்வேயை வீழ்த்தினாலும், தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றன. தென் ஆப்பிரிக்கா ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இப்போட்டியில் வெல்லும் அணி தென் ஆப்பிரிக்காவுடன் அரையிறுதிக்கு இணையும்.

தோற்கும் அணியின் உலகக் கோப்பை கனவுகள் முடிவுக்கு வரும்.ஈடன் கார்டன்ஸ் ஆடுகளம் சுழற்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆகியோருக்கு கணிசமான உதவி கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் பேட்டர்களும் நிலைத்து ஆட முடியும் என்பதால், இது ஒரு விறுவிறுப்பான போட்டிக்கு வழிவகுக்கும்.
டி20 சர்வதேச போட்டிகளில் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இதுவரை 30 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 19 போட்டிகளில் வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேற்கிந்தியத் தீவுகள் 10 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.
இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா மிக முக்கியமான வீரராக இருப்பார். ஜிம்பாப்வேக்கு எதிராக 30 பந்துகளில் 55 ரன்கள் குவித்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடக்கத்தில் தடுமாற்றங்கள் இருந்தாலும், அவரது தற்போதைய ஃபார்ம், அணிக்கு வலுவான தொடக்கத்தை அளிப்பதில் பங்காற்றும்.
இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், ஜிம்பாப்வேக்கு எதிராக 24 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங் வரிசைக்கு எதிராக விக்கெட்டுகளை வீழ்த்த அர்ஷ்தீப் பந்துவீச்சு இந்தியாவிற்கு உறுதுணையாக இருக்கும்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஷிம்ரோன் ஹெட்மையர் ஒரு முக்கியமான வீரர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சோபிக்கத் தவறினாலும், ஜிம்பாப்வேக்கு எதிராக 34 பந்துகளில் 85 ரன்கள் அடித்து தனது அதிரடி ஃபார்மை நிரூபித்தார். அவரது பங்களிப்பு அணிக்கு அவசியமானது.
குடகேஷ் மோட்டி, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வெற்றிக்கு இன்றியமையாத இடது கை சுழற்பந்து வீச்சாளர். மிடில் ஓவர்களில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி, ஜிம்பாப்வேக்கு எதிராக 28 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இந்தியாவின் பேட்டிங் வரிசைக்கு சவால் அளிப்பார்.

இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி வெற்றி பெறுமா, இல்லை வெஸ்ட் இண்டீஸ் அணி அதிர்ச்சி அளிக்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இரு அணியிலும் திறன் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். சம பலம் வாய்ந்த 2 அணிகள் மோதும் நிலையில், யார் பதற்றம் அடையாமல் வாய்ப்பை சரியாக பயன்படுத்துவார்களோ, அவர்களே அரையிறுதிக்கு செல்ல முடியும்.