மும்பை: இந்திய டெஸ்ட் அணி வரும் அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடருக்கான அணியில் தமிழ்நாடு விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் நாராயணன் ஜெகதீசனுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
காயம் காரணமாக முதன்மை டெஸ்ட் அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விலகியுள்ளதால், விக்கெட் கீப்பராக துருவ் ஜுரல் முதல் தேர்வாகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த என். ஜெகதீசன் மாற்று விக்கெட் கீப்பராகவும் நீடிப்பார்கள் என கூறப்படுகிறது.
மேலும், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இந்த டெஸ்ட் தொடரில் விளையாடத் தயாராக இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை அடுத்து, அஜித் அகர்கர் தலைமையிலான மூத்த தேர்வுக் குழு, புதன்கிழமை அன்று கூடி 15 பேர் கொண்ட இந்திய அணியைத் தேர்வு செய்ய உள்ளது.

பும்ரா தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை டி20 தொடரில் விளையாடி வருகிறார். இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில், ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கும் இடையே வெறும் மூன்று நாட்கள் மட்டுமே இடைவெளி இருக்கும். எனவே, பும்ராவின் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வளிக்கப்படுமா அல்லது அணியில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், இதுகுறித்து துபாயில் பேசிய இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் ரியான் டென் டஸ்கட்டே, "பும்ராவிற்கு ஓய்வளிக்கப்பட வாய்ப்பில்லை. அவர் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுவார். எங்களுக்கு முக்கியமான போட்டிகள் வரவிருக்கின்றன, அவர் தொடர்ந்து விளையாடி, போட்டி அனுபவத்தைப் பெறுவது நல்லது," என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில், மருத்துவக் குழுவின் ஆலோசனையின்படி பும்ரா 5 டெஸ்டுகளில் 3-ல் மட்டுமே விளையாடியது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தானைச் சேர்ந்த இளம் இடது கை சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதார், டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நடைபெற்று வரும் இந்தியா 'ஏ' மற்றும் ஆஸ்திரேலியா 'ஏ' அணிகளுக்கு இடையேயான போட்டியில், மானவ் சுதார் தனது அபாரமான பந்துவீச்சால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். செவ்வாய்க்கிழமை அன்று அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
23 வயதான மானவ் சுதார், இதுவரை 23 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அணியில் ஏற்கனவே ரவீந்திர ஜடேஜா இருந்தாலும், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த இளம் சுழற்பந்து வீச்சாளரைப் பட்டை தீட்ட தேர்வுக் குழு விரும்புவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (COE) தனது உடற்தகுதி தேர்வில் பங்கேற்றுள்ளார். இங்கிலாந்து தொடருக்குப் பிறகு இரண்டு மாத ஓய்வில் இருந்த ஜடேஜா, வெஸ்ட் இண்டீஸ் தொடரின் மூலம் மீண்டும் போட்டி கிரிக்கெட்டுக்குத் திரும்புகிறார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஜடேஜா ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதங்களுடன் பேட்டிங்கில் கலக்கியது நினைவுகூரத்தக்கது.