அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இளம் வீரர் சாய் சுதர்சன் வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்ததற்கு வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் ரோஸ்டன் சேஸ்-இன் சிறப்பான பந்துவீச்சு காரணமாக இருந்தாலும், அந்த விக்கெட் விழுவதற்கான உண்மையான காரணம், சக வீரரும், மூத்தவருமான கே.எல். ராகுலின் கோபம்தான் என்று ஒரு புதிய சர்ச்சை கிரிக்கெட் வட்டாரத்தில் வெடித்துள்ளது.
களத்தில் நடந்த ஒரு ரன் அவுட் குழப்பமும், அதைத் தொடர்ந்து ராகுல் வெளிப்படுத்திய அதிருப்தியுமே, சாய் சுதர்சனின் கவனத்தைச் சிதறடித்து, அவரது ஆட்டமிழப்புக்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது. என்ன நடந்தது?

இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து இந்தியா பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த பிறகு, மூன்றாவது வீரராகக் களமிறங்கினார் சாய் சுதர்சன். ஐபிஎல் தொடரில் இதே அகமதாபாத் மைதானத்தில் ரன் மழை பொழிந்ததால், அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், ஆட்டத்தின் தொடக்கம் முதலே அவர் நம்பிக்கையின்றி, தடுமாற்றத்துடனே காணப்பட்டார். இந்த நிலையில், போட்டியின் 24வது ஓவரில் அந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது. அந்த ஓவரின்போது, சாய் சுதர்சன் பந்தை ஷார்ட் லெக் திசையில் தட்டிவிட்டு, சிங்கிள் ஓட முயன்றார். சாய் ஓடத் தொடங்கியதும், மறுமுனையில் இருந்த கே.எல். ராகுல் வேகமாக ஓடி வந்தார். ஆனால், சில அடிகள் ஓடிய பிறகு, திடீரென மனதை மாற்றிக்கொண்ட சாய் சுதர்சன், ரன் வேண்டாம் என்று கூறி பாதியிலேயே நின்றுவிட்டுத் தனது கிரீஸுக்குத் திரும்பினார். இதை எதிர்பார்க்காத ராகுல், பிட்ச்சின் பாதி தூரத்தைக் கடந்து வந்துவிட்டார்.
சாய் சுதர்சனின் இந்த திடீர் பின்வாங்கலைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராகுல், உடனடியாகத் தனது கிரீஸை நோக்கித் திரும்பி ஓடினார். அதற்குள் ஃபீல்டர் பந்தை பந்துவீச்சாளர் முனையை நோக்கி எறிய, நூலிழையில் ரன் அவுட்டில் இருந்து தப்பிப் பிழைத்தார் ராகுல். தனது விக்கெட்டைப் பறிகொடுக்கும் நிலையில் இருந்து தப்பித்ததால், ராகுலின் கோபம் எல்லை மீறியது. அவர், இளம் வீரரான சாய் சுதர்சனை நோக்கி ஒரு கோபப் பார்வையை வீசி, மைதானத்திலேயே தனது அதிருப்தியை வெளிப்படையாகக் காட்டினார்.
ஒரு மூத்த வீரரின் இந்தச் செயல்பாடு, ஏற்கனவே தடுமாற்றத்துடன் ஆடிக்கொண்டிருந்த சாய் சுதர்சனின் மன அழுத்தத்தை மேலும் அதிகரித்தது. இந்தச் சம்பவத்தால் அவரது கவனம் முற்றிலுமாகச் சிதறியது. இதன் விளைவாக, அந்தச் சம்பவம் நடந்த அடுத்த ஓவரிலேயே அவர் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
கேப்டன் ரோஸ்டன் சேஸ் வீசிய மெதுவான பந்தை, புல் ஷாட் ஆட முயன்று, டைமிங் சரியாக அமையாமல் பந்து பேடில் பட, எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அந்த ரன் அவுட் குழப்பமும், அதனால் ஏற்பட்ட அச்சமும், சக வீரர் ராகுலின் கோபமுமே சாய் சுதர்சனின் கவனத்தைக் குலைத்து, அவரை ஆட்டமிழக்கச் செய்ததாக ரசிகர்கள் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.