கொல்கத்தா: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணியிடம் தோல்வியடைந்து வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை விட்டு வெளியேறியுள்ளது. இந்த வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்திய அணியின் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி வெற்றி தேடித்தந்த நிலையில், தோல்விக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் இந்திய அணியின் ஆட்டத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 195 ரன்கள் குவித்த போதிலும், இந்திய அணி 19.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தத் தோல்வி குறித்தும், தொடரிலிருந்து வெளியேறியது குறித்தும் போட்டி முடிந்த பிறகு ஷாய் ஹோப் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

தோல்விக்கான முக்கிய காரணம் குறித்துப் பேசிய ஷாய் ஹோப், "இந்த மைதானம் இலக்கைத் துரத்துவதற்கு மிகவும் சாதகமான ஒன்றாகும். எனவே, நாங்கள் எடுத்த ரன்கள் சற்று குறைவு என்றுதான் சொல்வேன். ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் நாங்கள் இன்னும் சில ரன்களைக் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். இந்திய அணியின் வெற்றிக்கு சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பான ஒரு இன்னிங்ஸை விளையாடினார். அதற்கான முழு பாராட்டுகளும் அவருக்கே சேர வேண்டும். நாங்கள் பேட்டிங்கில் இன்னும் சற்று கூடுதல் ரன்களை எடுத்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கலாம்" என்று கூறினார்.
ஆட்டத்தின் 12வது ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ச்சியாக இரண்டு விக்கெட்டுகளை (ஷிம்ரான் ஹெட்மையர் மற்றும் ரோஸ்டன் சேஸ்) வீழ்த்தியது குறித்துப் பேசிய அவர், "பும்ரா இந்திய அணியின் மிக முக்கியமான பந்துவீச்சாளர். அவர் கையில் பந்து இருக்கும்போதெல்லாம் ஆட்டத்தில் நிச்சயம் ஒரு திருப்புமுனை ஏற்படும். இந்தத் தொடர் முழுவதும் மிகச் சிறப்பான ஃபார்மில் இருந்த ஹெட்மையர் விளையாடிக்கொண்டிருந்த போது, பும்ரா அந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தது ஆட்டத்தின் மிக முக்கியமான தருணமாக அமைந்தது. இருப்பினும் நாங்கள் 190 ரன்களைக் கடந்து வெற்றிக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கினோம்" என்று தெரிவித்தார்.
தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சு குறித்துப் பேசிய அவர், "இந்த உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் எங்கள் அணியின் பந்துவீச்சு சிறப்பாகவே இருந்தது. வெவ்வேறு ஆடுகளங்களுக்கு ஏற்ப எங்களை மாற்றிக்கொண்டு சிறப்பாகச் செயல்பட்டோம். இதற்காக எங்கள் பந்துவீச்சாளர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். குறிப்பாகப் பவர் பிளே ஓவர்களில் அகீல் ஹுசைன் மிகச் சிறப்பாகப் பந்துவீசினார். அதேபோல அணிக்குத் திரும்பிய குடகேஷ் மோட்டியும் தனது பங்களிப்பைச் சரியாகச் செய்தார். ஆனால் இன்று எங்களால் வெற்றிக் கோட்டைத் தொட முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது" என்று வருத்தம் தெரிவித்தார்.

உலகக் கோப்பையை விட்டு வெளியேறியது குறித்து ஷாய் ஹோப் கூறுகையில், "இந்தக் கட்டத்தில் உலகக் கோப்பையை விட்டு வெளியேறுவதை எந்தவொரு அணியும் விரும்பப் போவதில்லை. இந்தப் போட்டியில் வென்றிருந்தால் நாங்கள் அரையிறுதிக்குச் சென்றிருப்போம். அங்கிருந்து இறுதிப்போட்டிக்கும் முன்னேறும் வாய்ப்பு எங்களுக்கு இருந்தது."
"இருந்தாலும் எங்கள் அணி வீரர்களின் போராட்டத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். நாங்கள் எங்களுக்கென ஒரு உயர்ந்த தரத்தை வைத்துள்ளோம். களத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதோடு, முக்கியமான தருணங்களை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை இந்தத் தோல்வி உணர்த்தியுள்ளது" என்று தெரிவித்தார்.

சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி அரையிறுதிக்குச் செல்லலாம் என்று நம்பிக்கையுடன் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, சஞ்சு சாம்சனின் சிறப்பான ஆட்டமும், பும்ராவின் துல்லியமான பந்துவீச்சும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.