டெல்லி: ஒருபுறம் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் டெல்லி டெஸ்ட்டில் ரன் குவித்து இந்தியாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறம், இந்தியாவின் பிரம்மாஸ்திரமான ஜஸ்பிரித் பும்ரா, களத்தில் இருந்தும் பயன்படுத்தப்படாமல், வெறும் பார்வையாளராக நின்று கொண்டிருக்கிறார். இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா வெறும் 4 ஓவர்கள் மட்டுமே பந்து வீசினார். இது பாதுகாப்பு நடவடிக்கையா அல்லது அணி நிர்வாகம் செய்த தவறா?
டெல்லி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 518 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து இருந்தது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 248 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபாலோ - ஆன் பெற்றது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் எதிர்பாராத வகையில் மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. இந்த நிலையில் தான் பும்ரா வெறும் 4 ஓவர்கள் வீசியது பேசுபொருளாக மாறி உள்ளது.
ஜஸ்பிரித் பும்ரா இந்திய கிரிக்கெட்டிற்கு ஒரு கோஹினூர் வைரம் போன்றவர். அதனால் அவரை காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என பிசிசிஐ கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. அதனால், அவரது பணிச்சுமையை உன்னிப்பாக கண்காணித்து போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காகவே, அவர் விரும்பும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாட அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், இந்த 'பணிச்சுமை மேலாண்மை' என்ற கொள்கை, வெஸ்ட் இண்டீஸ் போன்ற பலவீனமான அணிக்கு எதிரான உள்ளூர் தொடரில் அவரைத் தேர்ந்தெடுத்தபோதே முரண்பாடாகத் தெரிந்தது. ஆசிய கோப்பை போன்ற தொடர்களில் விளையாடிய அவருக்கு, நவம்பரில் வரவிருக்கும் முக்கியமான தென்னாப்பிரிக்கத் தொடருக்கு முன்பு முழுமையான ஓய்வளிப்பதே சரியான முடிவாக இருந்திருக்கும். ஆனால், அவரை அணியில் சேர்த்து விட்டு பின்னர் அதிக ஓவர்கள் கொடுக்காமல் இருந்தது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தக் குழப்பத்தின் உச்சக்கட்டம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் அப்பட்டமாக வெளிப்பட்டது. ஃபாலோ-ஆன் பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாவது இன்னிங்ஸில் ஜான் கேம்ப்பெல் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் விக்கெட் இழக்காமல் 138 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து உள்ளது. அவர்கள் இந்தியப் பந்துவீச்சைச் சோதித்தபோது, இந்தியாவின் துருப்புச் சீட்டான பும்ரா எங்கே போனார்?
வியக்கத்தக்க வகையில், இரண்டு செஷன்களுக்கும் மேலாக நீடித்த இந்த பார்ட்னர்ஷிப்பின் போது, பும்ரா வெறும் 4 ஓவர்களை மட்டுமே வீசினார். விக்கெட் தேவைப்பட்ட ஒரு கட்டத்தில், உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளரை ஓரங்கட்டியது ஏன் என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.
பிசிசிஐ-யின் இந்த அணுகுமுறை புரியாத புதிராக உள்ளது.பும்ராவின் பணிச்சுமைதான் உங்கள் கவலை என்றால், அவரை ஏன் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்தீர்கள்? அணியில் அவரைத் தேர்ந்தெடுத்து, நாள் முழுவதும் வெயிலில் ஃபீல்டிங் செய்ய வைத்து, வெறும் 4 ஓவர்கள் மட்டும் வீச வைப்பதில் என்ன வகையான ஓய்வு அளிக்கப்படும்?
இது பணிச்சுமை மேலாண்மை அல்ல; இது சரியான முடிவெடுக்கத் தெரியாத திணறல் மட்டுமே. பும்ரா அணியில் இருந்தால், அவர் இந்தியாவின் முக்கிய பந்துவீச்சு ஆயுதமாக இருக்க வேண்டுமே தவிர, ஒரு மாற்று வீரராக அல்ல. அவரை விளையாட வைத்து, பந்துவீச அனுமதிக்காமல் இருப்பது, அவரது உடற்தகுதிக்கும் உதவாது, ஃபார்முக்கும் உதவாது. சமீப காலமாக பும்ராவின் ஃபார்ம் சரிந்து வருவதாகவும் ஒரு விமர்சனம் எழுந்துள்ளது.
ஆனால், அவரை அணியில் சேர்த்தும் சரியாகப் பயன்படுத்தாதது, அணி நிர்வாகம் தங்கள் மாற்று வீரர்களின் பலத்தின் மீது நம்பிக்கை வைக்கத் தயங்குகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில், தவறான முடிவுகள், கைவிடப்பட்ட கேட்ச்களை விட அதிக விலை கொடுக்க வைக்கும். இந்திய அணி தற்போது அந்த விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.