ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், அதற்கு பழி தீர்க்கும் வகையில் ஜிம்பாப்வே அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்தது. துவக்க வீரர் சுப்மன் கில் 2 ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில், மற்றொரு துவக்க வீரர் அபிஷேக் சர்மா 47 பந்துகளில் 100 ரன்கள் குவித்தார். அடுத்து ருதுராஜ் கெய்க்வாட் 47 பந்துகளில் 77 ரன்களும், ரிங்கு சிங் 22 பந்துகளில் 48 ரன்களும் குவித்தனர்.

234 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை கண்டு தன்னம்பிக்கை இழந்த ஜிம்பாப்வே வீரர்கள் அடுத்து சேஸிங் செய்த போது மிகவும் நிதானமாக ஆடியதுடன் விக்கெட்களை வரிசையாக இழந்த வண்ணம் இருந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக வெஸ்லி 43 ரன்களும், லூக் 33 ரன்களும், பிரையன் பென்னட் 26 ரன்களும் எடுத்திருந்தனர். இதில் பென்னட் மட்டுமே அதிரடியாக ஆடி இருந்தார். அவர் 9 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து சிறிது நேரம் ஆட்டம் காட்டினார்.
IND vs ZIM: அடுத்த விராட் கோலி.. தரமான இன்னிங்ஸை ஆடிய ருதுராஜ் .. நிம்மதியான சிஎஸ்கே ஃபேன்ஸ்!
முகேஷ் குமார் 3 விக்கெட், ஆவேஷ் கான் 3 விக்கெட், ரவி பிஷ்னோய் 2 விக்கெட் வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட் வீழ்த்தினர். ஜிம்பாப்வே 18.4 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பதிவு செய்தது. இதை அடுத்து இரண்டு போட்டிகளின் முடிவில் 1 - 1 என இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் சமநிலையில் உள்ளன. இரண்டாவது போட்டியில் பெரிய வெற்றியை பெற்று இருப்பதால் மீதம் உள்ள மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.