புனே: இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான சுப்மன் கில் ஸ்பின்னரை கண்டாலே நடுங்குவதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சித்துள்ளார். இந்திய டாப் ஆர்டரில் உள்ள 4 வீரர்களில் 3 பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களை எதிர்த்து விளையாடுவதில் சிக்கலை சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான சுப்மன் கில்லின் ஆட்டம் ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் களமிறங்கும் போதும், உடனடியாக இடதுகை ஸ்பின்னர்கள் அட்டாக்கில் கொண்டு வரப்படுகிறார்கள்.

அவரும் இடதுகை ஸ்பின்னர்களை சமாளிக்க முடியாமல் விக்கெட்டை கொடுப்பதை வழக்கமாக்கி வருகிறார். ஐபிஎல் தொடரில் தோனி இதேபோன்ற ஒரு திட்டத்தை வைத்து தான் சுப்மன் கில்லை வீழ்த்தி இருந்தார். அதனை சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு அணிகளும் பயன்படுத்தி வருகின்றனர். இதனை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் காட்டமாக விமர்சித்துள்ளார்.
அதில், ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் பேட்டிங் செய்யும் போது, ஏதோ ஒன்று நடக்க போகிறது என்று நினைத்தேன். ஏனென்றால் சுப்மன் கில் இடதுகை ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் தடுமாறி கொண்டே இருந்தார். ஏனென்றால் சுப்மன் கில் போன்ற வீரர்கள் அவர்களின் கால்களை நகர்த்துவதில் கூட சில பிரச்சனைகள் இருக்கிறது. பிட்சில் கொஞ்சம் டர்ன் இருந்தாலும், அவர் அழுத்தத்தில் இருப்பதை காண முடிகிறது.
அவருக்கு மட்டுமல்லாமல் இந்திய அணி டாப் 4ல் 3 பேட்ஸ்மேன்களுக்கு ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் பிரச்சனை உள்ளது. ஸ்பின்னர்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள தடுமாறுகிறார்கள். 2வது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் டிஃபென்சிவ் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலே ஆட்டம் சுவாரஸ்யமாக சென்றிருக்கும். சுப்மன் கில்லின் பேட் லிஃப்டிலேயே பிரச்சனை இருக்கிறது.
ஸ்பின்னர்களை நம்பிக்கையுடன் எதிர்கொண்டால், பேட் லிஃப்டை குறைவாகவே வைத்திருப்பார்கள். ஆனால் சுப்மன் கில் ஸ்பின்னர்களை எதிர்கொள்ளும் போது சரியான நேரத்தில் பேட் வருவதில்லை. காலில் அணிந்துள்ள பேடிற்கு பின்னால் தான் பேட் இருக்கிறது. அதனால் எளிதாக எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டாகி வெளியேறிவிடுகிறார்.
அவ்வளவு உயரம் இருந்தும், பேட்டை கால்களுக்கு பின் வைத்து கொள்கிறார். இதனை சுப்மன் கில் விரைவாக சரி செய்ய வேண்டும். ஏனென்றால் ஏராளமான அணிகள் சுப்மன் கில்லின் ஆட்டத்தை கவனிப்பார்கள். அவர்கள் எளிதாக சில பவுண்டரிகள், சிக்சர்களை விட்டுக் கொடுத்துவிட்டு, எளிதாக ஒரு ஃபீல்டரை பின்னால் நிறுத்தி விக்கெட்டை வீழ்த்திவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.