நவி மும்பை: ஜெமிமா ரோட்ரிக்ஸின் வரலாற்றுச் சிறப்புமிக்க சதத்தின் உதவியுடன், இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2025 மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் சிறந்த ஆட்டத்திக்கான விருதை வாங்கிய ஜெமிமா இயேசுவுக்கு நன்றி கூறினார். மேலும், பைபிள் வாசகம் ஒன்றை தான் நினைவுப்படுத்தி பார்த்து நம்பிக்கையுடன் ஆடியதாக குறிப்பிட்டார்.
இந்தப் போட்டியில் 127 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று, ஆட்ட நாயகி விருது வென்ற ஜெமிமா ரோட்ரிக்ஸ் உணர்ச்சி ததும்பப் பேசினார். அவர் கூறியதாவது: "முதலில் இயேசுவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இது என்னால் மட்டும் சாத்தியமாகவில்லை. என் பெற்றோர், பயிற்சியாளர் மற்றும் என் மீது நம்பிக்கை வைத்த ஒவ்வொருவருக்கும் நன்றி. கடந்த ஒரு மாதம் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. இது இன்னும் ஒரு கனவு போலவே இருக்கிறது; என்னால் நம்பவே முடியவில்லை.

நான் 3-வது இடத்தில் பேட்டிங் செய்யப் போகிறேன் என்பதே எனக்குத் தெரியாது. நான் குளித்துக் கொண்டிருந்தேன். களமிறங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் என்னிடம் வந்து சொன்னார்கள். இந்த வெற்றி எனக்கானது அல்ல, இந்தியாவை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதே என் ஒரே நோக்கமாக இருந்தது.
கடந்த உலகக் கோப்பையில் நான் அணியில் இருந்து நீக்கப்பட்டேன். நல்ல ஃபார்மில் இருந்தும், சில விஷயங்கள் என் கட்டுப்பாட்டில் இல்லை. இந்தத் தொடர் முழுவதும் நான் கிட்டத்தட்ட தினமும் அழுதுள்ளேன். மனரீதியாகப் போராடினேன், மிகுந்த பதற்றத்தில் இருந்தேன். ஆனால், நான் களத்திற்கு வந்தே ஆக வேண்டும் என்று எனக்குத் தெரியும், கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டார்.
ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில், பைபிளில் இருந்து ஒரு வசனத்தை எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் - 'அமைதியாக நில், கடவுள் உனக்காகப் போராடுவார்' என்று. நான் அமைதியாக நின்றேன், அவர் எனக்காகப் போராடினார். ஹர்மன்ப்ரீத் வந்த பிறகு, ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று நினைத்தோம். தீப்தி ஷர்மா ஒவ்வொரு பந்திலும் என்னிடம் பேசி என்னை ஊக்கப்படுத்தினார்.
எனக்குக் கிடைத்த இந்த பாராட்டுக்கள் எதையும் நான் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. நான் தனியாக எதையும் செய்யவில்லை. இங்கு கூடியிருந்த ரசிகர்கள் ஒவ்வொரு ரன்னுக்கும் கொடுத்த ஆதரவும், உற்சாகமும்தான் எனக்குள் ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது" என்று ஜெமிமா கண்ணீருடன் கூறினார்.
339 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, ஸ்மிருதி மந்தனா (24) நல்ல தொடக்கத்தை அளித்தாலும், அவரது விக்கெட்டுக்குப் பிறகு சற்று பதற்றம் நிலவியது. அப்போது களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆட்டத்தின் முழுப் பொறுப்பையும் தனது தோள்களில் சுமந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் நங்கூரமிட்டு ஆடிய அவர், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருடன் (89 ரன்கள், 88 பந்துகள்) இணைந்து ஒரு அற்புதமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். கேப்டன் ஆட்டமிழந்த பிறகும், தனது நிதானமான ஆனால் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெமிமா, 134 பந்துகளில் 127 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றியை உறுதி செய்தார். அவருக்கு தீப்தி ஷர்மா (24) மற்றும் ரிச்சா கோஷ் (26) ஆகியோர் உறுதுணையாக ஆடினர்.
முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில், தொடக்க வீராங்கனை ஃபோப் லிட்ச்ஃபீல்ட் (119), எலிஸ் பெர்ரி (77) மற்றும் ஆஷ்லே கார்ட்னர் (65) ஆகியோரின் அபார ஆட்டத்தால் அந்த அணி 50 ஓவர்களில் 338 ரன்கள் குவித்தது. இந்த வரலாற்று வெற்றியின் மூலம், இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை இதே மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.