மும்பை: 2025 மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில், அசைக்க முடியாத அணியாகக் கருதப்பட்ட ஆஸ்திரேலியாவை இந்திய அணி தட்டித் தூக்கி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், தனக்கே உரிய நையாண்டி மற்றும் பாராட்டுகள் நிறைந்த பாணியில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவரது ட்வீட், சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்திய அணியின் வெற்றியைத் தொடர்ந்து, வீரேந்திர சேவாக் தனது X (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டதாவது: "ஆஸ்திரேலியா, இது மற்றுமொரு அரையிறுதிப் போட்டி, இதில் எளிதாக வென்று இறுதிப் போட்டிக்குச் சென்றுவிடலாம் என்று நினைத்திருக்கும். ஆனால், நம்முடைய வீராங்கனைகளோ, உண்மையான பட்டாசுகளை வெடிக்க இதுதான் சரியான வாய்ப்பு என்று நினைத்துவிட்டார்கள்! தங்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்தையும் ஒரே ஆட்டத்தில் அடித்து நொறுக்கிவிட்டனர். என்ன ஒரு அற்புதமான ஆட்டம். நமது நீலப்படை வீராங்கனைகளை நினைத்துப் பெருமைப்படுகிறேன்."

சேவாக்கின் இந்த ட்வீட், ஆஸ்திரேலியாவின் மிதமிஞ்சிய நம்பிக்கையையும், இந்திய அணியின் வெல்ல வேண்டும் என்ற வெறியையும் ஒரே வரியில் சுட்டிக்காட்டியுள்ளது. "பட்டாசுகளை வெடிப்பது" என்ற வார்த்தை, இந்திய வீராங்கனைகள் வெளிப்படுத்திய அச்சமற்ற, அதிரடியான ஆட்டத்தை சேவாக்கின் பாணியில் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. மேலும், இந்த வெற்றிக்கு முன்பு அணி மீது இருந்த விமர்சனங்களையும் அவர்கள் தங்களின் ஆட்டத்தால் தவிடுபொடியாக்கிவிட்டனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நவி மும்பையில் நடைபெற்ற இந்த அரையிறுதிப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, ஃபோப் லிட்ச்ஃபீல்டின் (119) அபார சதத்தால் 338 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. இந்த மாபெரும் இலக்கைக் கண்டதும், ஆஸ்திரேலியாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே பலரும் கருதினர்.
ஆனால், ஜெமிமா ரோட்ரிக்ஸின் சதம் (127* ரன்கள்), கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் பொறுப்பான ஆட்டம் (89 ரன்கள்) ஆகியவற்றால், இந்தியா இந்த இலக்கை 9 பந்துகள் மீதமிருக்க எட்டியது. இதன் மூலம் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்தது.