
தொடக்கமே அபாரம்
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 34 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து இருந்தது. தவான் 33 ரன்னிலும், விஜய் 43 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். புஜாரா 34 ரன்னுடனும், விடைபெறும் டெஸ்டில் விளையாடும் சச்சின் டெண்டுல்கர் 38 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

டெண்டுல்கர் புயல்
நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. டெண்டுல்கர் களம் கண்ட போது மைதானத்தில் நிரம்பி வழிந்த அனைத்து ரசிகர்களும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பியதுடன், சச்சின், சச்சின் என்று கோஷமிட்டனர். ரசிகர்களின் உணர்ச்சிமயமான வாழ்த்துக்கு மத்தியில் டெண்டுல்கர், புஜாரா தொடர்ந்து ஆடினார்கள்.

அரை சதம் கடந்த டெண்டுல்கர்
ஷில்லிங்போர்டு வீசிய 2-வது ஓவரில் டெண்டுல்கர் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விரட்டி ரசிகர்களை துள்ள வைத்தார். 39-வது ஓவரில் பவுண்டரி விளாசி டெண்டுல்கர் அரை சதத்தை கடந்தார். 91 பந்துகளில் 9 பவுண்டரியுடன் அரை சதத்தை எட்டிய அவர் டெஸ்ட் போட்டியில் அடித்த 68-வது அரை சதம்.

74 ரன்களில் அவுட்
டெண்டுல்கர் 118 பந்துகளில் 12 பவுண்டரியுடன் 74 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

கோஹ்லி அரைசதம்
இதைத்தொடர்ந்து புஜாராவுடன் ஜோடி சேர்ந்த விராத் கோஹ்லி 53 பந்துகளில் 4 பவுண்டரியுடன் அரை சதத்தை தொட்டார். 20-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அவர் அடித்த 7-வது அரை சதம் இதுவாகும். சிறப்பாக ஆடிய கோஹ்லி 57 ரன்களில் அவுட் ஆனார்.

சதமடித்த புஜாரா
அடுத்து ரோஹித் சர்மா, புஜாராவுடன் இணைந்தார். நிலைத்து நின்று ஆடிய புஜாரா சதம் அடித்தார். அவர் 146 பந்துகளில் 11 பவுண்டரியுடன் சதத்தை எட்டினார். 15-வது டெஸ்டில் விளையாடும் புஜாரா அடித்த 5-வது சதம் இதுவாகும். அபாரமாக ஆடிய புஜாரா 167 பந்துகளில் 12 பவுண்டரியுடன் 113 ரன்கள் எடுத்த நிலையில் ஷில்லிங்போர்டு பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

4 ரன்களில் டோணி அவுட்
இதனை அடுத்து களம் கண்ட கேப்டன் டோணி 4 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அஸ்வின் 32 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 30 ரன் எடுத்து அவுட் ஆனார். அடுத்து புவனேஷ்வர்குமார், ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். தேனீர் இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 413 ரன்கள் எடுத்து இருந்தது.

அசத்திய ரோஹித் சர்மா சதம்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அறிமுக டெஸ்டான முதல் ஆட்டத்தில் அசத்தி கன்னி சதம் கண்ட ரோஹித் சர்மா, இந்த டெஸ்டிலும் கலக்கினார். 2-வது டெஸ்டில் ஆடும் அவர், சாமுவேல்ஸ் பந்து வீச்சில் சிக்சர் அடித்து தனது 2-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

495 ரன்கள் குவிப்பு
இந்திய அணி முதல் இன்னிங்சில் 108 ஓவர்களில் 495 ரன் குவித்து ஆல்-அவுட் ஆனது. மேற்கிந்திய தீவுகள் அணியைவிட 313 ரன்கள் இந்தியா முன்னிலையில் இருந்தது. ரோஹித் சர்மா 127 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்சருடன் 111 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

தடுமாறிய மே.இ. தீவுகள்
பின்னர் 313 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை மேற்கிந்திய தீவுகள் அணி ஆடியது. நேற்றைய ஆட்டம் முடிவில் 12.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 43 ரன் எடுத்து தோல்வியை நோக்கி பயணித்தது. இன்று 3-ம் நாள் ஆட்டத்தின் போதும் இந்திய வீரர்கள் அஸ்வின், ஓஜா ஆகியோரது பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மேற்கிந்திய தீவுகள் அணியினர் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த அணி 187 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இந்தியா அபார வெற்றி
இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 126 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சச்சின் கண்ணீருடன் விடை
இப்போட்டி முடிந்ததும் சகவீரர்கள் அணிவகுக்க சச்சின் பிரியா விடை பெற்றார். இந்த போட்டியின் ஸ்டம்பை நினைவுக்காக எடுத்து சென்றார் சச்சின்.


Click it and Unblock the Notifications











