இந்திய ஏ அணியில் 150 கிமீ வேகப்பந்து வீச்சாளர் சேர்ப்பு.. காயமடைந்த யுத்வீர்-க்கு பதிலாக அசோக் சர்மா
கொழும்பு: இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் யுத்வீர் சிங்கிற்கு பதிலாக 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் ஆற்றல் கொண்ட இளம் வேகப்பந்து வீச்சாளர் அசோக் சர்மா இந்திய 'ஏ' அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கையின் தம்புள்ளா நகரில் இந்தியா 'ஏ', இலங்கை 'ஏ' மற்றும் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடர் நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் விளையாடி வந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் யுத்வீர் சிங் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக 23 வயதான அசோக் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையிலேயே இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்று தம்புள்ளாவில் உள்ள இந்திய அணியுடன் இணைய உள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு ஒரு நாளுக்கு முன்புதான் அசோக் சர்மா தனது உள்நாட்டு கிரிக்கெட் அணியை ராஜஸ்தானில் இருந்து குஜராத் மாநிலத்திற்கு மாற்றினார். இதற்காக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் அவருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. சிறந்த வாய்ப்புகளுக்காகவே குஜராத் அணிக்கு மாறியதாக அசோக் சர்மா தெரிவித்துள்ளார்.
150 கிலோமீட்டர் வேகம்
அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அறிமுகமான அசோக் சர்மா, மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி அனைவரையும் கவர்ந்தார். இத்தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு 2022ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 55 லட்சம் ரூபாய்க்கும், பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 30 லட்சம் ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்ட அவர், இந்த ஆண்டு மினி ஏலத்தில் 90 லட்சம் ரூபாய்க்கு குஜராத் அணியால் வாங்கப்பட்டார்.
கம்மின்ஸ் தந்த அட்வைஸ்
தனது பந்துவீச்சு குறித்துப் பேசிய அசோக் சர்மா, கடந்த 2022ல் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தனக்கு வழங்கிய ஆலோசனையை நினைவுகூர்ந்தார். "கம்மின்ஸ் என்னிடம் எனது பலம் என்ன என்று கேட்டார். நான் வேகமாகவும், கடினமான லெந்திலும் பந்துவீசுவது எனது பலம் என்றேன். அதை மட்டுமே தொடர்ந்து செய்யும்படி அவர் கூறினார். அவரது அந்த வார்த்தைகள் இன்றும் எனது நினைவில் உள்ளன" என்று அசோக் சர்மா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications