ரோகித் சர்மா காயம்
வங்கதேச அணிக்கு எதிரன 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் கேப்டன் ரோகித் சர்மா ஃபில்டிங் செய்யும் போது விரலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் ஆட்டத்தின் பெரும்பாலான பகுதியில் விளையாடவில்லை. இறுதியாக பேட்டிங் செய்ய களமிறங்கிய அவர், வெற்றிக்காக கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தினார்.
ரோகித் சர்மா சந்தேகம்
இதனைத் தொடர்ந்து 3வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் ரோகித் சர்மா காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அபிமன்யூ ஈஸ்வரன் தேர்வு?
இதனால் ரோகித் சர்மா காயத்தின் தன்மையை அறிந்து பிசிசிஐ மாற்று வீரர்களை தயார்படுத்தியுள்ளது. கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பதிலாக இந்தியா ஏ அணியின் கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் தேர்வு செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே வங்கதேச ஏ அணிக்கு எதிராக சதம் விளாசி இருந்தார். அதேபோல் ரோகித் சர்மா காயத்தால் விலகினால், கேஎல் ராகுல் - சுப்மன் கில் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உம்ரான் மாலிக்
அதேபோல் காயம் காரணமாக வங்கதேச தொடரில் இருந்து விலகியுள்ள மூத்த வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு பதிலாக உம்ரான் மாலிக் அல்லது முகேஷ் குமார் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உம்ரான் மாலிக் தேர்வு செய்யப்பட்டால், டி20, ஒருநாள் கிரிக்கெட்டை தொடர்ந்து டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.