பார்படாஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 181 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியில் இந்திய அணி வென்ற நிலையில், 2வது போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோப் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டதால், சஞ்சு சாம்சன் மற்றும் அக்சர் படேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து இந்திய அணி தரப்பில் சுப்மன் கில் - இஷான் கிஷன் கூட்டணி களமிறங்கியது. இருவருமே தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒரு கட்டத்தில் அதிரடிக்கு மாறிய இஷான் கிஷன் அரைசதம் அடித்து அசத்தினார். இதையடுத்து சுப்மன் கில்லும் அதிரடிக்கு திரும்ப இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இந்த நிலையில் முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், சுப்மன் கில் 34 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து இஷான் கிஷன் 55 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் அக்சர் படேல் 1 ரன்னில் வீழ்ந்தார். இதனால் 97 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா - சஞ்சு சாம்சன் இணைந்து இந்திய அணியை மீட்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக ஹர்திக் பாண்டியா 7 ரன்களிலும், சாம்சன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து சிறிது நேரம் தாக்குபிடித்த ஜடேஜா 10 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் டெய்லண்டர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி வெறும் 40.5 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் மோட்டீ மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இல்லாத இந்திய அணி மிகவும் பலவீனமாக இருப்பது அப்பட்டமாக தெரிய வந்துள்ளது.