
நாறிப்போன பவுலிங்
5 ஒன்டேக்களிலுமே, இந்திய பேட்டிங் ஜொலியோ, ஜொலி என ஜொலித்தபோதிலும், பந்து வீச்சு, மங்கலாகி மறைந்தேவிட்டது. தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் போட்டிபோட்டு விக்கெட்டுகளை சுருட்டிய அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும், ஆஸ்திரேலிய மண்ணில், பெட்டிக்குள் சுருண்டே விட்டனர்.

அஸ்வின் வெளியே
உலக ஸ்பின்னர்களில் நம்பர்-1 இடத்தில் இருக்கும் அஸ்வினை, ஆட்டத்தைவிட்டே தூக்க கேப்டன் டோணியை தூண்டிவிட்டது இந்த தர்ம அடிகள்தான்.

முதல் டி20
இந்த இக்கட்டுக்கு நடுவேதான், உலக கோப்பை, டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் 8ம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ள நிலையில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடனான டி20 போட்டித்தொடரின் முதல் ஆட்டத்தை நேற்று எதிர்கொண்டது இந்தியா.

ரன் குவித்த இந்தியா
வழக்கம்போல ரோகித் ஷர்மா, கோஹ்லி என இந்திய பேட்ஸ்மேன்கள் டி20-யிலும் ஜொலித்தனர். போதாத குறைக்கு, டி20-க்காக பிளைட் பிடித்து ஆஸி.போன ரெய்னாவும், ரன் வேட்டையாடினார். 20 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 188 ரன்களை குவித்தது.

இந்த ரன் போதுமா
எத்தனை ரன் குவித்தாலும், இந்திய ரசிகர்களுக்கு என்னவோ, இதிலும் இந்திய அணி தோற்றுவிடுமோ என்ற சந்தேகம் மட்டும் அப்படியேத்தான் இருந்தது. ஒன்டே தொடரில் இந்தியாவின் ரன் குவிப்பை ஆஸி. அசாத்தியமாக தாண்டிச்சென்றதை பார்த்து பழகியதால் வந்த விரக்தியின் நீட்சிதான் அந்த சந்தேகம்.

சேனலை மாற்றினர்
தொடக்கத்தில் ஆஸ்திரேலியா ஆடிய விதமும், ரசிகர்கள் சந்தேகத்தை உறுதி செய்வதாகத்தான் இருந்தது. பின்ன என்ன.. ஒரே விக்கெட்டை இழந்து 81 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா ஆக்ரோஷமாக ஆடியதைப் பார்த்துவிட்டு, அட போங்கப்பா.. என சலித்தபடி ரிமோட்டை தேடியவர்கள்தான் அதிகம்.

பண்டியாவ பிளந்துட்டாங்களே
அடித்து ஆட வேண்டிய நெருக்கடியில், விக்கெட்டுகள் சரியத்தொடங்கின. நடுவில், புதுமுக வேகபந்து வீச்சாளர் பண்டியா புண்ணியத்தில், ஆஸ்திரேலியா கொஞ்சம் ரன் பார்த்ததோடு சரி. ஸ்பின்னர்களிடம் அவர்கள் பருப்பு வேகவில்லை.

சுருட்டிட்டாங்கல்லே
கூடுதலாக 62 ரன்கள் சேர்ப்பதற்குள் எஞ்சிய 9 விக்கெட்டுகளை இழந்து, 151 ரன்களிலேயே ஆல்-அவுட் ஆகி, இந்தியாவிடம் 37 ரன்கள் வித்தியாசத்தில் சரண் அடைந்தது ஆஸ்திரேலியா. 4 ஓவர்கள் வீசிய ஜடேஜா, 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பழைய பன்னீரா திரும்பிய அஸ்வின்
அஸ்வின் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதோடு, தனது பந்து வீச்சில் மெருகை ஏற்றி, ரன்களை ஸ்கோர் செய்ய விடாமல் நாசூக்காக பந்து வீசி அசத்தினார். போதாத குறைக்கு, யுவராஜ்சிங்கும், தனது பங்குக்கு அசத்தலாகவே ஒரு ஓவர் வீசினார். ஆனால், மற்ற பந்துகள் சிறப்பாக இருந்தபோதிலும், 1 பந்து சிக்சருக்கு போனதால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்தியாவின் மலிங்கா
ஆஷிஷ் நெஹ்ரா, டெத் ஓவர்களில், எப்போதுமே ஒரு டேஞ்சரஸ் பந்து வீச்சாளர் என்பதை மீண்டும் நிரூபித்தார். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது பும்ரா. கொஞ்சம் கையை சரித்து, ஓரளவுக்கு, இலங்கையின் மலிங்கா போன்ற ஆக்ஷனுடன் பந்து வீசும், ஜஸ்பிரீத் பும்ரா, டெத் ஓவர்களில் பதற்றமேயில்லாமல் பவுலிங் செய்து அசத்தினார். அபாயகர பேட்ஸ்மேன் ஃபால்க்னரை கிளீன் பௌல்ட் செய்த அழகு இருக்கிறதே, அடடே.. ஆரம்பத்தில் வார்னரையும் இவரே கபளீகரம் செய்தார்.

யார்க்கர் பார்சல்
ஜாகீர்கானுக்கு பிறகு, அசத்தல் யார்க்கர் வீச ஆளில்லாமல் தவித்த இந்திய அணிக்கு, பும்ரா ஒரு வரப்பிரசாதம். டி20 உலக கோப்பை அணியில் நிச்சயமாக அவருக்கு ஒரு இடம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

முதல் ஆட்டங்களில் முத்திரை
சிட்னியில் நடைபெற்ற ஆஸி.க்கு எதிரான 5வது ஒன்டேயிலும், 10 ஓவர்கள் பந்து வீசி, 2 விக்கெட்டுகளை சாய்த்து 40 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார் பூம்ரா. நேற்றைய, டி20-யிலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு போட்டிகளுமே, அவருக்கு முதலாவது சர்வதேச ஆட்டங்கள் என்பது இதில் சிறப்பு.

டோணி பாரம் குறைந்தது
சுரேஷ் ரெய்னா, யுவராஜ்சிங் வருகை, டோணிக்கு பெரும் பாரத்தை குறைத்துள்ளது. கடைசி கட்டத்தில் நின்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச்செல்லும் கவனத்தில் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை மறந்திருந்த டோணியின் கைகள், தற்போது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

வந்தது ஹெலிகாப்டர்
நேற்றைய டி20 போட்டியில், டோணி தான் சந்தித்த முதல் பந்தை, சிக்சருக்கு தூக்கி, கோதாவுக்கு நான் ரெடி என பறைசாற்றியது இதற்கு சான்று. அந்த சிக்சரும், ரொம்ப நாளாக மறந்து போயிருந்த ஹெலிகாப்டர் ஷாட்டில் இருந்து புறப்பட்டது சிறப்பு.

ஆல்-ரவுண்டர் அணி
வேகப்பந்து வீச்சில் அனுபவசாலி நெஹ்ராவுடன், இளம் நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா கைகோர்த்துள்ளது இந்திய அணிக்கு பலம் சேர்க்கும். அஸ்வின், ஜடேஜா தவிர, யுவராஜ், ரெய்னா என ஸ்பின் ஆல்-ரவுண்டர்களும் அணியிலுள்ளனர்.

ரஹானே டவுட்டு
லோவர்-மிடில் ஆர்டர் வரை பேட்ஸ்மேன்களால் நிரம்பி வழிகிறது இந்திய லைன்-அப். காயம் குணமடைந்து திரும்பினாலும், 11 பேர் அணியில், ரஹானேவுக்கே இடம் கிடைப்பது கஷ்டம்தான் என்கிறது அணி நிலவரம்.

இந்தியாவுக்கு சவால்
உலக கோப்பை டி20 போட்டிகளில், இந்திய அணிக்கு சவாலாக இருக்க கூடியவை, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள்தான் என்பது வல்லுநர்கள் கணிப்பு. இம்மூன்று அணி பேட்ஸ்மேன்களுமே திணறுவது சுழற்பந்து வீச்சில்தான்.

கோப்பையை வெல்லும் இந்தியா
உலக கோப்பை டி20 போட்டி நடக்கப்போவது இந்தியாவில் என்பதால் இங்கு ஸ்பின் பந்து வீச்சாளர்கள் கையே ஓங்கும். எனவே இந்திய பவுலிங்கை எதிர்கொள்வது பிற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாகத்தான் இருக்கும். இந்திய பேட்டிங் வலுவாக உள்ள நிலையில், சுழற்பந்தும் கைகொடுக்கும்பட்சத்தில், கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக இந்தியா மாறும்.


Click it and Unblock the Notifications











