ஹர்பஜனுக்கு 5 ஒருநாள் போட்டிகள் பிசிசிஐ தடை

கடந்த மாதம் 25ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியுடன் நடந்த போட்டியில் தோற்ற கடுப்பில் இருந்த ஹர்பஜன் சிங் எதிரணி வீரர் ஸ்ரீசாந்த கன்னத்தில் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஐபிஎல் போட்டிகளில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து குஜராத் உயர்நீதிமன்ற மூத்த வக்கில் நானாவதி தலைமையில் விசாரணை நடத்த பிசிசிஐ ஏற்பாடு செய்தது.
இந்த சம்பவம் குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் யுவராஜ், அறைவாங்கிய ஸ்ரீசாந்த், ஹர்பஜன் உள்ளிட்ட வீரர்களிடம் நானாவதி விசாரணை நடத்தினார். மேலும் சம்பவம் பற்றிய வீடியோ ஆதாரத்தையும் அவர் பார்த்தார்.
இந்நிலையில் வக்கீல் நானாவதி தனது அறிக்கையை பிசிசிஐயிடம் நேற்று தாக்கல் செய்தார். அதில் நடந்த சம்பவங்களை பதிவு செய்திருந்தார்.இந்த அறிக்கையின் பேரில் ஹர்பஜன் சிங்குக்கு 5 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கைக் குழு தடை விதித்துள்ளது.
இந்த தடை உடனே அமலுக்கு வருவதால் எதிர்வரும் வங்கதேசத்தில் நடக்கும் முத்தரப்பு போட்டிகளிலும், அடுத்தமாதம் பாகிஸ்தானில் நடக்கும் ஆசியக்கோப்பை துவக்க ஆட்டங்களிலும் ஹர்பஜன் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், இனியும் இதுபோன்ற ஒழுங்கீனத்தில் ஹர்பஜன் ஈடுபட்டால் அவருக்கு ஆயுள்கால தடை விதிக்கப்படும் என்று ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவர் சரத் பவார் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக இன்று பிற்பகலில் மும்பையில் ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு ஹர்பஜன் நேரில் ஆஜரானார். குழுவில் சரத்பவார், புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷாஷங்க் மனோகர், துணைத்தலைவர் சிராயு அமீன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
அப்போது நானாவதி தாக்கல் செய்த 14 பக்க அறிக்கை பற்றி குழுவினர் ஆலோசனை செய்தனர். அறிக்கையின் நகலை ஹர்பஜன் படிப்பதற்காக வழங்கினர்.
இந்த நிலையில் தன்மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வதாகவும், தன்மீது இரக்கம் காட்டவேண்டும் என்றும், இனிவரும் காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என்றும் குழுவினரிடம் ஹர்பஜன் தெரிவித்தார்.
இதையடுத்து வீரர்கள், அணி நிர்வாகிகள், அம்பயர்களுக்கான பிசிசிஐ நடத்தை விதி 3.2.1. படி அவருக்கு ஐந்து சர்வதேச ஒருநாள் போட்டிகள் தடை விதிப்பதாக குழுவினர் உத்தரவிட்டனர்.
இந்த விதியின்படி ஒருவருக்கு அதிகபட்சமாக ஐந்து ஒருநாள் போட்டிகள் அல்லது மூன்று டெஸ்ட் போட்டிகளில் தடைவிதிக்க முடியும். அதன்படி ஹர்பஜனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டது. 27 வயதான சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் ஏற்கெனவே 11 ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளார். இதனால் போட்டி சம்பளத் தொகையான ரூ.3 கோடியை அவர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:18 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications