
ராகுல் அதிரடி
டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து கேஎல் ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் வங்கதேச அணியின் முதல் சில ஓவர்களை எதிர்கொள்ள தடுமாறினர். டஸ்கின் அகமது வீசிய அவரது 2வது ஓவரில் ரோகித் சர்மாவை கொடுத்த கேட்ச் வாய்ப்பை வங்கதேச வீரர் ஹசன் கோட்டை விட்டார். எனினும் ரோகித் சர்மா அடுத்த ஓவரிலேயே கேட்ச் மிஸ் செய்த ஹசன் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். இதனிடையே கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடி சிக்சர், பவுண்டரிகளை அடிக்க தொடங்கினார்.

கோலி அரைசதம்
9வது ஓவரில் மட்டும் இந்திய அணி 24 ரன்களை விளாசியது. இதன் மூலம் கேஎல் ராகுல் 31 பந்தில் அரைசதம் கடந்தார். இதில் 4 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். எனினும் அடுத்த பந்திலேயே ராகுல் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, சூர்யகுமார் யாதவ் 16 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 30 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். ஹர்திக் பாண்டியா, கார்த்திக் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை அதிரடியாக விளையாடிய கோலி, 44 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார்.

185 ரன்கள் இலக்கு
அஸ்வின் தன் பங்கிற்கு ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து 6 பந்தில் 13 ரன்கள் எடுக்க, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தார். லிட்டன் தாஸ் 21 பந்தில் அரைசதம் கடந்தார்.

குறுக்கிட்ட மழை
இந்திய அணி வீரர்கள் ஒரு கேட்ச் மற்றும் ஒரு ரன் அவுட் வாய்ப்பை வீணடித்தனர். வங்கதேச அணி 7 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்த தருணத்தில் ஆட்டம் கைவிடப்பட்டு இருந்தால், டக் வொர்த் லூயிஸ் விதி படி வங்கதேச அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இருக்கும்.

ஆட்டத்தில் திருப்புமுனை
இதனையடுத்து ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்ட போது 16 ஓவரில் வங்கதேச அணி 151 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது லிட்டன் தாஸ் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராகுல் செய்த ரன் அவுட் ஆட்டத்தை தலைகீழாக மாற்றியது. இதனையடுத்து இந்திய வீரர்கள் கட்டு கோப்பாக பந்துவீச, வங்கதேச பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட் ஆடி விக்கெட்டுகளை பறிகொடுத்தார்.

கடைசி ஓவர்
கடைசி ஓவரில் வங்கதேச வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஆர்ஸ்தீப் சிங் வீசிய ஓவரில் சிக்சரும், பவுண்டரியும் சென்றதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அதில் வங்கதேச அணி ஒரு ரன் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஆர்ஸ்தீப், ஹர்திக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.


Click it and Unblock the Notifications











