மகளிர் அணிக்கும் ஐபிஎல் போட்டிகள் வேண்டும்: கேப்டன் மிதாலி ராஜ் விருப்பம்
மும்பை: பெண்கள் கிரிக்கெட் அணிக்கும் ஐபிஎல் போட்டிகள் நடத்தினால் இந்திய வீராங்கனைகள் திறனை மேலும் மெருகேற்றிக்கொள்ள உதவியாக இருக்கும் என்று கேட்டான் மிதாலி ராஜ் கூறியுள்ளார்.
ஐசிசி உலக மகளிர் கிரிக்கெட் போட்டிகளை முடித்துக்கொண்டு நேற்று இந்திய அணி நாடு திரும்பியது. மும்பை விமான நிலையத்தில் உற்சாகம் பொங்க அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இந்திய அணியின் கேப்டன் மிதாலிராஜ் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், " எங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு பெண்கள் கிரிக்கெட்டுக்கு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. பெண்களுக்கு ஐ.பி.எல். போட்டி நடத்த வேண்டுமா? என சில ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் கேட்டு இருந்தால் அதை நானே ஆதரித்திருக்கமாட்டேன்.
ஆனால் தற்போது நிலைமை வேறு. இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை போட்டியில் நமது வீராங்கனைகளின் திறன் வெகுவாக முன்னேறி இருப்பது தெரிந்துள்ளது. அது கிரிக்கெட்டை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

இந்திய வீராங்கனைகளின் தரம் உயர்வு
மகளிர் ஐ.பி.எல். போட்டி கொண்டு வர வேண்டும் என்றால் ஆட்டத்தின் பொதுவான தரம் நன்றாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். உலக கோப்பை போட்டியின் புள்ளி விவரங்களை பார்த்தால் எங்களது தரம் உயர்ந்து இருப்பதை மிக தெளிவாக புரிகிறது.

300 ரன்கள் குவிப்பது எளிது
இந்த உலக கோப்பை போட்டியில் 300 ரன்களுக்கு மேல் எளிதாக குவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு அணியிலும் சதம் அடிக்கும் வீராங்கனைகளும், 5 விக்கெட்டுகள் வீழ்த்தக்கூடிய திறன் படைத்த வீராங்கனைகளும் இருப்பதை பார்க்க முடிந்தது.

ஐபிஎல் வேண்டும்
ஐ.பி.எல். போட்டி உள்ளூர் வீராங்கனைகளின் தரத்தை உயர்த்த உதவிகரமாக இருக்கும். ஐ.பி.எல். போட்டியை நடத்துவது என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவை பொறுத்ததாகும். இது போன்ற லீக் போட்டிகள் வீராங்கனைகளின் திறமைகளை மேம்படுத்த வழிவகுக்கும்.

பெருமையாக இருக்கிறது
மேலும் வெளிநாட்டு வீராங்கனைகளுடன் கலந்துரையாட வாய்ப்பு கிடைப்பது நல்ல அனுபவத்தை கொடுக்கும் என்பது எனது எண்ணமாகும். இந்திய பெண்கள் அணி மக்கள் மனதை அதிகம் கவர்ந்து இருப்பது பெருமை அளிக்கிறது.

எல்லா போட்டிகளுக்கும் லைவ் வேண்டும்
தற்போது பெண்கள் கிரிக்கெட்டும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதுபோல் எல்லா போட்டிகளையும் நேரடி ஒளிபரப்பு செய்தால் மேலும் அதிகமாக மக்களின் கவனத்தை ஈர்க்க முடியும்." என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications