மும்பை : இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
அண்மையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்த டெஸ்ட் தொடரின் விளையாடியதன் மூலமாக அஸ்வின் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பெருமையை பெற்றதோடு, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார்.

அதேபோல் முதல் 3 போட்டிகளில் அஸ்வின் எதிர்பார்த்த அளவிற்கு விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை. இருப்பினும் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் தனது சம்பவத்தை செய்தார். இதன் மூலமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மொத்தமாக 26 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இருப்பினும் ரவிச்சந்திரன் அஸ்வின் மீதான விமர்சனங்கள் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ஒவ்வொரு முறையும் அஸ்வின் தனது திறமையை நிரூபித்து கொண்டே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ரோகித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் பேசுகையில், ரவிச்சந்திரன் அஸ்வினின் கிரிக்கெட் சாதனைகளே அவர் யார் என்பதை சொல்லும். ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை எத்தனை முறை வென்றிருக்கிறார் என்று பாருங்கள்.
அதன் மூலமாக இந்திய அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னர் என்பது புரியும். இந்தியாவின் எந்த மைதானத்தில் விளையாடினாலும், அஸ்வினின் கைகள் ஓங்கியே இருக்கும். இந்திய அணி வெளிநாடுகளில் விளையாடினாலும் சரி, இந்தியாவிலும் விளையாடினாலும் சரி.. எப்போதும் பிரஷர் இருக்கும். அதனை அஸ்வின் நன்றாக உணர்ந்திருப்பார். ஏதாவது ஒரு போட்டியின் ஒரு இன்னிங்ஸில் அஸ்வின் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றால், உடனடியாக ரசிகர்கள் அஸ்வினுக்கு வாய்ப்புகள் கொடுத்தது போதும் என்று பேச தொடங்கிவிடுகிறார்கள்.
அஸ்வினுக்கு இது தொடர்ந்து நடந்து வருகிறது. அஸ்வினும் மனிதர் தான். அவரும் சில நேரங்களில் சொதப்புவார். ஆனால் ஒவ்வொரு முறையும் அஸ்வின் எவ்வளவு முடியுமோ, அவ்வள்வு தூரம் சென்று முயற்சிப்பார். ஒவ்வொரு முறையும் உச்சபட்ச ஆட்டத்தை அஸ்வின் ஒவ்வொரு போட்டியிலும், ஒவ்வொரு டெஸ்ட் தொடரிலும் வெளிப்படுத்துவதை பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.