மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விலகியதற்கான காரணம் குறித்து தெரிய வந்துள்ளது. தனது 2வது குழந்தை பிறக்கவுள்ள நிலையில், அந்த நேரத்தில் மனைவி ரித்திகாவுடன் இருக்க வேண்டும் என்பதால் ரோஹித் சர்மா இந்த முடிவை எடுத்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி வரும் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது. சொந்த காரணங்களால் விலகுவதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரோஹித் சர்மா பேசுகையில், இந்திய அணியுடன் பயணிப்பேனா என்பது தெரியவில்லை. அதுகுறித்து விரைவில் தெரிய வரும் என்று கூறினார். அதேபோல் பிசிசிஐ தரப்பில் ரோஹித் சர்மா திட்டமிட்டபடி ஆஸ்திரேலியாவுக்கு வரவில்லை என்றால், அவருக்கு பேக் அப் வீரராக அபிமன்யூ ஈஸ்வரனை தயார் செய்து வருகிறது.
இந்த நிலையில் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதற்கான காரணம் குறித்து தெரிய வந்துள்ளது. இந்திய வீரர்களுடன் நெருங்கிய நட்பில் இருக்கும் வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே பேசுகையில், பெர்த் டெஸ்ட் போட்டியை ரோஹித் சர்மா மிஸ் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் அவரது குடும்பத்தில் புதிதாக ஒரு உயிர் சேரவுள்ளது என்று கூறினார்.
கடந்த சில மாதங்களாகவே ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா அவருடன் எந்தப் போட்டிக்கும் பயணிக்கவில்லை. மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டியை மட்டும் நேரில் பார்க்க வந்த ரித்திகா, வழக்கத்திற்கும் அதிகமான எடையில் காணப்பட்டார். அப்போதே ரித்திகா கர்ப்பமாக இருப்பதாக சில செய்திகள் பரவின. தற்போது ஹர்ஷா போக்ளே அதனை உறுதி செய்திருக்கிறார்.
ரோஹித் சர்மா - ரித்திகா தம்பதியினருக்கு 2018ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு சமைரா என்று பெயரிடப்பட்டது. தற்போது 6 ஆண்டுகளுக்கு பின், தம்பதியினர் 2வது குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி முதல் குழந்தை பிறப்புக்காக கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.