பிரிட்ஜ்டவுன்: 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் நிலை ஸ்திரமாகி விட்டது. பாதுகாப்பான இடத்தை நோக்கி இந்தியா நகர்ந்து சென்று விட்டது. மீண்டும் ஒரு முறை அனுபவப் புயல்களான ராகுல் டிராவிடும், வி.வி.எஸ்.லட்சுமணும் சேர்ந்து இந்தியாவின் நிலையை ஸ்திரமாக்கி விட்டனர்.
முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான வெற்றியைப் பெற்ற இந்தியா, தற்போது 2வது போட்டியிலும் வெல்லக் கூடிய வாய்ப்புகளை பிரகாசமாக்கியுள்ளது.
2வது இன்னிங்ஸை ஆடி வரும் இந்தியா, 4வது நாள் ஆட்ட நேர இறுதியில், 3 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்து, லீடிங்கை 240 ரன்களாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் நிலை பாதுகாப்பானதாக மாறியுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்குக் காரணமான ராகுல் டிராவிட் இப்போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
2வது இன்னிங்ஸை நிலை நிறுத்த டிராவிடு்ம், லட்சுமணும் கடுமையாகப் போராடினர். டிராவிட் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் லட்சுமண் ஆட்டமிழக்காமல் தொடர்ந்து ஆடி வருகிறார். 72 ரன்களுடன் அவர் தொடர்ந்து ஆடி வருகிறார்.
அவருக்குத் துணையாக விராத் கோலி 26 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்தியா 4வது நாள் ஆட்ட நேர இறுதியில், 3 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.
இதன் மூலம் 240 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா. கையில் இன்னும் 7 விக்கெடக்ள் மீதமுள்ளன, லட்சுமண் சதத்தை நோக்கி விரைந்து வருகிறார். இன்னும் கணிசமான ரன்களைச் சேர்த்த பின்னர் நல்ல வலுவான லீடிங்கைப் பெற்ற பின்னர் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு நெருக்கடி கொடுத்து வெற்றிக் கனியைப் பறிக்குமா இந்தியா என்பது எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.