IND vs NZ: மீண்டும் காயமடைந்தாரா முகமது ஷமி? ஆஸ்திரேலியா தொடரில் கம்பேக் சாத்தியமா.. உண்மை என்ன?
பெங்களூர்: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மீண்டும் காயமடைந்ததாக வெளியான தகவல் குறித்து உண்மை தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ மற்றும் முகமது ஷமி ஆகிய இரு தரப்பும் விளக்கம் அளித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் முகமது ஷமி எப்போது களம் திரும்புவார் என்பதும் தெரிய வந்துள்ளது.
உலகக்கோப்பை தொடரின் போது இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி காலில் காயம் ஏற்பட்டது. இருந்தாலும் ஊசி போட்டுக் கொண்டு உலகக்கோப்பை தொடரை முழுமையாக விளையாடினார். இதன்பின் ஓய்வில் இருந்த முகமது ஷமிக்கு கடந்த பிப்ரவரி மாதம் லண்டனில் சிறப்பு மருத்துவர்களை கொண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பின்னர் ஐபிஎல் தொடர், டி20 உலகக்கோப்பை தொடரை மிஸ் செய்த முகமது ஷமி, 3 மாதங்களுக்கு முன்பாக பயிற்சியை தொடங்கினார். முதலில் தனது பண்ணை வீட்டில் வைத்து சிறிய உடற்பயிற்சிகளை மேற்கொண்ட முகமது ஷமி, பின்னர் பவுலிங் செய்வதற்கான ரன் அப்பிலும் ஈடுபட்டார். இதன் மூலமாக ஷமி பழைய நிலைக்கு திரும்பியதாக பார்க்கப்பட்டது.
ஆனால் வங்கதேச டெஸ்ட் தொடரில் முகமது ஷமி சேர்க்கப்படவில்லை. இதனால் அவர் முழுமையாக குணமடையவில்லை என்று தெரிய வந்தது. இதன்பின் முகமது ஷமி நேரடியாக என்சிஏவிலேயே பயிற்சியை தொடங்கினார். இதனால் முகமது ஷமி ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு கட்டாயம் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் என்சிஏவில் பயிற்சி மேற்கொண்ட போது முகமது ஷமியின் காலில் மீண்டும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. இதனால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் கூறுகையில், ஷமியின் கம்பேக் சரியான பயணத்தில் சென்று கொண்டிருக்கிறது. நியூசிலாந்து டெஸ்ட் தொடரை இலக்காக வைத்து பணியாற்றி வருகிறோம்.
பிசிசிஐ-ன் சிறப்பு நிர்வாகியை வைத்து முகமது ஷமியை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவர் விரைவாக குணமடைந்து வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஷமி தனது சோசியல் மீடியா பக்கத்தில், இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள் ஏன் பரப்பப்படுகிறது? நான் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.
என் தரப்பிலோ அல்லது பிசிசிஐ தரப்பிலோ ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. மீண்டும் இதுபோல் எனது அனுமதியின்றி ஆதாரமற்ற செய்திகளை யாரும் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்னும் ஒரு வாரத்தில் தேர்வு செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications