லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் டெஸ்ட் கொண்ட தொடர் தற்போது வெற்றிகரமாக முடிவடைந்து இருக்கிறது. ஆண்டர்சன் டெண்டுல்கர் கோப்பையில் இந்திய அணி இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் போட்டிகளை சமன் செய்து இருக்கின்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த நெடுந்தொடர் கட்ந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி வரை நடைபெற்றிருக்கிறது. இந்த தொடர் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டின் மகிமையை மீண்டும் ஒரு முறை ரசிகர்கள் அறிந்து கொண்டனர்.

அது மட்டுமில்லாமல் புதிய ரசிகர்களும் டெஸ்ட் கிரிக்கெட் நோக்கி வந்திருக்கிறார்கள். ஐபிஎல் மட்டுமே பார்த்து பழகிய பல 2K கிட்ஸ் களுக்கு நேற்றைய டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்திருந்தது. இந்த நிலையில் இந்திய அணி அடுத்தது எப்போது கிரிக்கெட் போட்டியின் விளையாடும் என்பதை தற்போது பார்க்கலாம்.
அடுத்த தொடர் எப்போது?
ஒரிஜினல் அட்டவணைப்படி ஆகஸ்ட் மாதம் இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதாக இருந்தது. ஆனால் இருநாட்டுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினை காரணமாக இந்த தொடர் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆகஸ்ட் மாதம் தங்களது நாட்டுக்கு வந்து இந்திய அணி கிரிக்கெட் போட்டிக்கு விளையாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தது. ஆனால் அது குறித்து பிசிசிஐ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வு கிடைத்திருக்கின்றது.
செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை
இனி இந்திய அணி வந்து செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள ஆசிய கோப்பை போட்டியில் தான் விளையாடும். இந்த தொடர் துபாயில் நடைபெற இருக்கின்றது. இந்த போட்டிகள் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் பிறகு இந்திய அணி மீண்டும் டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கின்றது.
அக்டோபர் இரண்டாம் தேதி அகமதாபாத்தில் இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. அதன் பின் அக்டோபர் 10ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு தான் பும்ரா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் இந்திய அணி அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
டிசம்பர் மாதம் வரை சுற்றுப்பயணம்
இந்த தொடர் நவம்பர் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் பின் தென்னாப்பிரிக்காவுடன் இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் நவம்பர் 14ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறும்.