மும்பை : 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் இடம் பெற வேண்டுமா என்பது குறித்து கௌதம் கம்பீர் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
2022-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி இறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் t20 சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது அடுத்த டி20 உலக கோப்பைக்கு முன் இந்திய அணி வெறும் ஆறு டி20 போட்டிகளில் தான் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டிகளிலும் விளையாடுவதற்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆர்வம் காட்டவில்லை. இதனால் இந்திய அணி புதிய வீரர்களை வைத்து அணியை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கம்பீர், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கண்டிப்பாக டி20 உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக ரோகித் சர்மா கேப்டனாக சிறந்து விளங்கி இருப்பதாகவும் ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று இருப்பதாகவும் பாராட்டியுள்ள கம்பீர் என்னுடைய அணியில் ரோகித் சர்மா தான் கேப்டன் என்றும் கூறியிருக்கிறார்.
எனினும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பார்ம் எவ்வாறு இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு அணியில் சேர்ப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் கம்பீர் கூறியுள்ளார். டி20 போட்டியில் விளையாடுவதற்கு வயது எந்த ஒரு தடையும் இல்லை என்றும் வயதை வைத்து எந்த வீரரை நீக்குவதோ சேர்ப்பதோ கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.