டோமினிக்கா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், முதல் நாளிலேயே இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

இருவரும் சதம் விளாசிய நிலையில், 312 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற ஸ்கோருடன் இந்திய அணி 3வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. ஜெய்ஸ்வாலும், கிங் கோலியும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர். இதில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 171 ரன்களில் வெளியேறினார்.
இதன் பிறகு விராட் கோலி தனது 29வது அரைசதத்தை கடந்தார். மேலும் விராட் கோலியும் மூன்று இலக்க மைல்கல்லை எட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 76 ரன்களில் அவர் பெவிலியன் திரும்பினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 3 ரன்னில் வெளியேற, ஜடேஜா 37 ரன்கள் சேர்த்த நிலையில், இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் 271 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கும் நெருக்கடியான நிலையில் வெஸ்ட் இண்டீஸ் உள்ளது.