அகமதாபாத்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டுமென்றால், முகமது ரிஸ்வானை விரைந்து வீழ்த்த வேண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இரு அணிகளுமே தலா 2 வெற்றிகளுடன் மோதவுள்ளதால், யார் வெல்வார்கள் என்ற விவாதம் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் அணியுடன் ஒப்பிடும் போது இந்திய அணி பலம் வாய்ந்ததாக கருதப்பட்டாலும், பாகிஸ்தான் அணியில் ஒற்றை ஆளாய் நின்று ஆட்டத்தை மாற்றக் கூடிய வீரர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.

அந்த வகையில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான முகமது ரிஸ்வான் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன். சாதாரணமாக இவரின் ஆட்டத்தை பார்க்கும் போது இந்திய முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் ஆகியோரை போன்ற பேட்டிங் ஸ்டைல் தான் ரிஸ்வானின் பேட்டிங் ஸ்டைலும் இருக்கும்.
இதுபோன்ற ஸ்டைலில் விளையாடும் வீரர்களால் வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்துவீச்சாளர்களை சரி சமமாக விளாச முடியும். அதேபோல் டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக வரும் ரிஸ்வான், ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் 4 பேட்ஸ்மேனாக வருகிறார். அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 6வது வரிசையில் களமிறங்குகிறார். 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் வெவ்வேறு இடங்களில் ரிஸ்வான் விளையாடி வருவது அவரை இன்னும் அபாயகரமான வீரராக மாற்றியுள்ளது.

இந்த உலகக்கோப்பை தொடரிலேயே நெதர்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது, முகமது ரிஸ்வன் களத்தில் இருந்து ஆட்டத்தை மாற்றினார். அதேபோல் இலங்கை அணிக்கு எதிராக 37 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த போது ரிஸ்வான் மொத்தமாக சதம் விளாசி அணியை வெற்றிபெற வைத்துள்ளார்.
2 போட்டிகளிலும் சேர்த்து 199 ரன்கள் குவித்துள்ள ரிஸ்வான் இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. இதனால் மிடில் ஆர்டரில் களமிறங்கும் ரிஸ்வானை வீழ்த்த இந்திய அணி சரியான திட்டத்துடன் களமிறங்கவில்லை என்றால், அகமதாபாத்தில் புதிய வரலாறு படைக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது.